பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

உதம்பூர் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 14 JUL 2024 7:28PM by PIB Chennai

பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய நேரத்தில் தடையின்றி வழங்குவதை  உதம்பூர் மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும் என்று என்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

உதம்பூரில்  மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், தண்ணீர் பற்றாக்குறை, மின் தடை, சேதம் அடைந்த சாலைகள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தல்களை வழங்கினார். பொது மக்களின் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட நிர்வாக்தை அவர் கேட்டுக் கொண்டார்.

மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தொடர்ச்சியான மின் தடை பிரச்சினை இருப்பதாக கூட்டத்தில் தெரிவித்தனர். இது குறித்துப் பேசிய மத்திய இணையமைச்சர், மின்சாரத் துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தந்த இடங்களுக்குச் சென்று மதிப்பீடு செய்து பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதேபோல், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் கிராமப்புறங்களில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்யவும் பிற சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார்.

***

 

PLM/KV

 



(Release ID: 2033173) Visitor Counter : 27