குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நகராட்சிகள் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக கன்டோன்மென்ட் பகுதிகள் இருக்க வேண்டும் – குடியரசு துணைத்தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUL 2024 6:09PM by PIB Chennai
கன்டோன்மென்ட் பகுதிகளில் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு தாவரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். கன்டோன்மென்ட் பகுதிகளில் மூலிகைத் தோட்டங்கள், தோட்டக்கலைகளை ஊக்குவிப்பதன் மூலம் இதை அடைய முடியும் என்றும் சமூகத்திற்கு பெரும் பயனாற்ற முடியும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற இந்திய பாதுகாப்பு எஸ்டேட் பணியின் 2023-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய திரு தன்கர், கன்டோன்மென்ட் பகுதிகள் தூய்மை, பசுமை, குடிமை வசதிகளில் மற்ற அமைப்புகளுக்கு (நகராட்சிகள் போன்றவை) முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப, புவிசார் அரசியல் தன்மையைக் குறிப்பிட்டு, விரைவாக மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப இளம் அதிகாரிகள் தொடர்ந்து தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று துணைத்தலைவர் அறிவுறுத்தினார். எப்போதும் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட அவர், போருக்கு எப்போதும் தயாராக இருப்பது ராணுவத்தின் சிறந்த வழிமுறையாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலப்பரப்பு நமது பாதுகாப்புக்கு முக்கியமானவை என்று தெரிவித்த அவர், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான நிலப்பரப்பை நிர்வகிப்பதில் அத்துமீறல்கள், அதைத் தொடர்ந்து ஏற்படும் சட்ட நடவடிக்கைகள் போன்ற பல சவால்களை பாதுகாப்புத்துறை நில மேலாண்மை பிரிவு எதிர்கொள்வதை சுட்டிக்காட்டினார். நில மேலாண்மையில் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு பயிற்சி அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். இது எந்தவொரு ஊடுருவலையும் கண்காணிக்கவும், உறுதியான முறையில் விரைவான தீர்வு நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களுக்கு உதவும் என்று திரு தன்கர் கூறினார்.
***
SMB/IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2031607)
வருகையாளர் எண்ணிக்கை : 104