குடியரசுத் தலைவர் செயலகம்
உத்கலமணி பண்டிட் கோபபந்து தாஸின் 96-வது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
06 JUL 2024 8:34PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில்,உத்கலமணி பண்டிட் கோபபந்து தாஸின் 96-வது நினைவு தினத்தையொட்டி 2024 ஜூலை 6 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒரு நபர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்பது முக்கியமல்ல என்றும் அவர் என்ன நல்ல பணிகளைச் செய்துள்ளார் என்பதே முக்கியம் என்றும் கூறினார். அந்த நபர் சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்த பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே அவரது பணிகள் மதிப்பிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பண்டிட் கோபபந்து தாஸ், குறைந்த காலமே வாழ்ந்தாலும் அவரது வாழ்நாளில் பல நல்ல செயல்களைச் செய்திருக்கிறார் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். சமூக சேவை, இலக்கியம், கல்வி, பத்திரிகை ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
முறையான கல்வி இல்லாமல் எந்த ஒரு சமூகமும் நாடும் முன்னேறாது என்பதை பண்டிட் கோபபந்து தாஸ் நன்கு உணர்ந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். கல்வி என்பது ஏட்டளவில் மட்டுமல்லாமல் மாணவர்களை உடல், மனம், அறிவு, ஆன்மீக ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்று அவர் கருதியதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.
பண்டிட் கோபபந்து தாஸ் தேசியவாதத்திலும் ஜனநாயக விழுமியங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். கோபபந்து தாஸின் சிந்தனைகளில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டார்.
*****
SMB/PLM/KV
(Release ID: 2031370)