சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு தொடர்பான ஊட்டச்சத்து தகவல்களை பெரிய எழுத்துகளில் தெரியப்படுத்தும் திட்டத்திற்கு எஃப்எஸ்எஸ்ஏஐ ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 06 JUL 2024 6:14PM by PIB Chennai

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில், மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு தொடர்பான ஊட்டச்சத்து தகவல்களை பெரிய எழுத்துக்களில் காட்சிப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ - FSSAI) ஒப்புதல் அளித்துள்ளது.

ஊட்டச்சத்து தகவல் தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள்-2020-ல் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் இந்த முடிவு உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக்கூட்டம் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவர் திரு அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்றது. நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை நன்கு புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரம் அளிப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திருத்தத்திற்கான வரைவு அறிவிக்கை இப்போது பொது களத்தில் வைக்கப்படும். அதன் மீது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படும்.

ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ள நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், தொற்றா நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த திருத்தம் பங்களிக்கும்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், வர்த்தக அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு அமைச்சகம், சட்டம் அமைச்சகம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொழில் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***

PLM/KV

 



(Release ID: 2031269) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi , Marathi