தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

'இந்திய - ஆப்பிரிக்க அஞ்சல்துறை தலைவர்கள் மாநாடு' இந்தியாவில் நடைபெறுகிறது

Posted On: 24 JUN 2024 7:38PM by PIB Chennai

அஞ்சல் துறையில் இந்தியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் 'இந்திய - ஆப்பிரிக்க அஞ்சல்துறை தலைவர்கள் மாநாடு' இந்தியாவில் 2024 ஜூன் 21 முதல் 25 வரை நடைபெறுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளின் நலன் உள்பட வளரும் நாடுகளின் நலனில் கவனம் செலுத்தும்வகையில், தெற்குலக நாடுகளின் குரல் என்ற உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியதுடன், இந்தி-ஆப்பிரிக்க மன்றத்தை உருவாக்கியது. அத்துடன் 2023-ம் ஆண்டில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது ஜி-20-ல் ஆப்பிரிக்க யூனியனை இந்தியா இணைத்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் நிலையில் தற்போது 22 ஆப்பிரிக்க நாடுகளின் அஞ்சல் அமைப்புகளைச் சேர்ந்த 42 அஞ்சல் துறை நிர்வாகத் தலைவர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

விரிவான அஞ்சலகக் கட்டமைப்பின் மூலம் வெற்றிகரமான அஞ்சல் சேவை நடைமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. அஞ்சல்துறை சேவைகளில் டிஜிட்டல் முறையை இணைப்பதில் இந்தியா தனித்துவமான அணுகுமுறையைக் கையாள்கிறது. இது சர்வதேச  நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வளரும் நாடுகளில் உள்ள அஞ்சல் துறைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. சவால்களை திறம்பட எதிர்கொள்ள நாடுகளுக்கிடையேயான அஞ்சல் நிர்வாகங்களுக்கிடையில் ஒத்துழைப்பு முக்கியமானது. அதை நோக்கமாகக் கொண்டே இந்த இந்திய-ஆப்பிரிக்க அஞ்சல்துறை தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.  பரஸ்பர, கற்றல் மற்றும் புதிய கூட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கான ஒரு தளத்தை இது வழங்குகிறது.

இந்த மாநாட்டின் போது  தபால் நிதி சேவைகள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி போன்றவை தொடர்பாக இந்தியா சார்பில்  ஆப்பிரிக்க நாடுகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

2024 ஜூன் 24 புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

***

(Release ID: 2028361)

SMB/PLM/AG/RR



(Release ID: 2028455) Visitor Counter : 29