பாதுகாப்பு அமைச்சகம்
அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்திய கடற்படையின் 26-வது தளபதியாக பொறுப்பேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2024 5:11PM by PIB Chennai
அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, இன்று இந்திய கடற்படையின் 26-வது கடற்படைத் தலைவராக பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகித்து வந்த அட்மிரல் ஆர் ஹரி குமார், ஓய்வு பெற்றதையடுத்து இவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, சைனிக் பள்ளி ரேவா மற்றும் கடக்வாஸ்லாவின் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் 1985-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கடற்படையின் முன்னணி போர்க்கப்பல்களில் சமிக்ஞை தகவல் தொடர்பு அதிகாரி மற்றும் மின்னணு போர் அதிகாரியாகவும், பின்னர் ஐ.என்.எஸ் மும்பையின் நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மை போர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் கிர்ச் மற்றும் ஐஎன்எஸ் திரிசூல் ஆகியவை அட்மிரல் திரிபாதி பணியாற்றிய முக்கிய கப்பல்களாகும். ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீடித்த அவரது பணியில் ஏராளமான பொறுப்புக்களை அவர் வகித்துள்ளார்.
அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கொச்சியில் உள்ள சிக்னல் பள்ளி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, கரஞ்சாவில் உள்ள கடற்படை உயர் கட்டளை பாடநெறி மற்றும் அமெரிக்காவின் அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் கடற்படை கட்டளை கல்லூரி ஆகியவற்றில் படிப்புகளை முடித்துள்ளார்.
இன்று கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் கடற்படைத் துணைத் தளபதியாக இருந்தார்
*****
AD/PKV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2019205)
வருகையாளர் எண்ணிக்கை : 194