எரிசக்தி அமைச்சகம்
வளர்ந்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின்சார திறனை அதிகரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது: மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
11 FEB 2024 7:06PM by PIB Chennai
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மின்துறையும் வளரும் என்றும் அதனால் இத்துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர். கே. சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் டைம்ஸ் குழுமம் ஏற்பாடு செய்திருந்த எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் "உலகளாவிய எரிசக்தி செயல் திட்டம்: நாளைய எரிசக்தி சூழலை வடிவமைக்கும் அம்சங்கள் தொடர்பாக ஒரு பார்வை" என்ற அமர்வில் நேற்று (10-02-2024) உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். எனவே, இது வளர்ச்சி அடையும் ஒரு துறை என்றும் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். தேவைக்கு ஏற்ப விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே அரசின் பணி என்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மின்துறை பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து பேசிய அமைச்சர், சமீபத்திய ஆண்டுகளில் அவற்றின் பங்கு விலைகள் 2.5 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளன என்றும், அவை தொடர்ந்து வளரும் என்றும் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வளர்ச்சி உலகிலேயே மிக வேகமாக இந்தியாவில் உள்ளது என்று அமைச்சர் கூறினார். புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் ஏற்கனவே மொத்த மின் திறனில் 44 சதவீதமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து மொத்த திறனில் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் திரு ஆர்கே சிங் கூறினார். இந்தியாவின் மின்சார பரிமாற்ற அமைப்பு உலகின் வேறு எந்த பரிமாற்ற அமைப்பையும் விட முன்னணியில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
*******
ANU/AD/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2005093)
வருகையாளர் எண்ணிக்கை : 154