பாதுகாப்பு அமைச்சகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

Posted On: 01 JAN 2024 4:29PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் சம்வித் குருகுலம் மகளிர் ராணுவப் பள்ளியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 01, 2024 அன்று திறந்து வைத்தார். அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / தனியார் / மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவும் முயற்சியின் கீழ் சுமார் 870 மாணவர்களுடன் முதலாவது அனைத்து மகளிர் ராணுவப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், சம்வித் குருகுலம் மகளிர் ராணுவப் பள்ளி ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டிற்கு சேவை செய்ய விரும்பும் இளம் பெண்களுக்கு ஓர் ஒளிவிளக்கு என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், பல ஆண்டுகளாகப் பெண்கள் புறக்கணிக்கப்பட்ட ஆயுதப்படைகளில் அவர்களுக்கு உரிய இடத்தை அரசு வழங்கியுள்ளது. ஆண்களைப் போலவே தேசத்தைப் பாதுகாக்கும் உரிமை பெண்களுக்கும் உண்டு. ராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நாங்கள் ஒப்புதல் அளித்தது மகளிருக்கு அதிகாரமளித்தல் வரலாற்றில் ஒரு பொன்னான தருணமாகும். இன்று, நமது பெண்கள் போர் விமானங்களை இயக்குவது மட்டுமின்றி, எல்லைகளையும் பாதுகாக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும், ஆயுதப்படைகளில் சேருவது உள்ளிட்ட சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதும் 100 புதிய ராணுவப் பள்ளிகளை அமைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையின் நோக்கமாகும்.

பிருந்தாவனத்தில் உள்ள சம்வித் குருகுலம் மகளிர் ராணுவப் பள்ளியின் திறப்பு விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 1992125)

ANU/PKV/SMB/AG/KRS



(Release ID: 1992192) Visitor Counter : 120