சுரங்கங்கள் அமைச்சகம்

2023-ஆம் ஆண்டில் சுரங்க அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

Posted On: 29 DEC 2023 12:05PM by PIB Chennai

"வலுவான சுரங்கமும் கனிமத் துறையும் இல்லாமல் தற்சார்பு சாத்தியமில்லை; ஏனெனில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள்" என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சுரங்க அமைச்சகம் 2023- ஆம் ஆண்டில் தொடர்ச்சியான கொள்கை முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் மற்றும் விதிகளில் திருத்தங்கள் மூலம் முக்கியமான அமைச்சகங்களில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியப் பொருளாதாரத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க வழிவகுக்கும். இந்த நடவடிக்கைகளில் நமது பொருளாதாரத்தின்  உத்தி சார்ந்த துறைகளில் தாக்கம் செலுத்தும்  முன்னோடி முயற்சிகளும் அடங்கும். 2023-ஆம் ஆண்டில் சுரங்க அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் / சீர்திருத்தங்களின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

                                  

நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, முக்கியமான கனிமங்களின் முதல் தவணை ஏலத்தை 2023, நவம்பர் 29 அன்று தொடங்கினார். இதில் கிராஃபைட், லித்தியம், குளுக்கோனைட், பொட்டாஷ், நிக்கல் போன்ற 20  கனிமங்கள் அடங்கும். இந்தக்  கனிமங்களை ஏலம் விடுவதும், பிரித்தெடுப்பதும், முக்கியமான கனிமங்களில் தன்னிறைவை அடையவும், நமது பொருளாதாரத்தை உயர்த்தவும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும், தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்கான நமது மாற்றத்தை ஆதரிக்கவும் உதவும்.

ஒப்பந்த ஆவண விற்பனை 29.12.2023 அன்று தொடங்கி 22.12.2023 அன்று ஏலத்திற்கு முந்தைய கூட்டம் நடத்தப்பட்டது. கனிமத் தொகுப்புகள், ஏல விதிமுறைகள், காலக்கெடு போன்றவற்றை எம்.எஸ்.டி.சி ஏல தளத்தில் அணுகலாம். வெளிப்படையான இரண்டு கட்ட ஏல செயல்முறை மூலம் இந்த ஏலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில், முக்கியமான கனிமங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத ஒரு மைய புள்ளியாக உள்ளன. ஒரு சில நாடுகளில் இந்த தாதுக்கள் கிடைக்காதது அல்லது அவற்றின் பிரித்தெடுத்தல் அல்லது செயலாக்கத்தின் செறிவு இல்லாதது,  விநியோகத்  தொடரில் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் மற்றும் புவியின் அரிய தனிமங்கள் (ஆர்.இ.இ) போன்றவற்றை சார்ந்திருக்கும் தொழில்நுட்பங்களால் எதிர்கால உலகளாவிய பொருளாதாரம் வழிநடத்தப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 50% நிறுவப்பட்ட மின் திறனை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது. மின்சாரக் கார்கள், காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள் மற்றும் மின்கலன் சேமிப்பு அமைப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும் எரிசக்தி மாற்றத்திற்கான அத்தகைய லட்சிய திட்டம் இந்த முக்கியமான தாதுக்களின் தேவையை அதிகரிக்கும். முக்கியமான கனிமங்கள் அதிக தேவையில் உள்ளன. இந்தத் தேவை  பொதுவாக இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

முக்கியமான கனிமங்களின் விநியோகத் தொடரை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முன்முயற்சிகளை இந்தியா முனைப்புடன் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், மத்திய அரசு, ஆகஸ்ட் 2023-ல் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திருத்தத்தை செய்து, முதல் அட்டவணையின் பகுதி டி-ல் உள்ள இருபத்து நான்கு கனிமங்களை முக்கியமான கனிமங்களாக அறிவித்தது.

இந்த ஏலங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநில அரசுகளுக்கு கிடைக்கும். ஏலத்தில் அதிக பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக முக்கியமான கனிமங்களின் உரிமைத்தொகை விகிதங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. பிளாட்டினம் குழும உலோகங்கள் (பி.ஜி.எம்) 4%, மாலிப்டினம் 7.5%, குளுக்கோனைட் மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றுக்கான உரிமைத்தொகை விகிதங்களை 2.5% ஆக மார்ச் 2022-ல் அரசு  நிர்ணயித்தது. அக்டோபர் 12, 2023 அன்று அரசு  லித்தியம் 3%, நியோபியமேட் 3% மற்றும் புவியின் அரிய  தனிமங்களுக்கு 1% உரிமைத்தொகை விகிதங்களை நிர்ணயித்துள்ளது. மிக அண்மையில், 19.12.2023 அன்று சுரங்க அமைச்சகம் முக்கியமான கனிமங்கள் குறித்த தகவல்களை மேலும் பரப்புவதற்காக ஒரு சாலைப் பேரணியை நடத்தியது.

 2015-ஆம் ஆண்டில் ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து,  நாட்டில் 335 கனிம சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை 76 கனிம வளங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இவற்றில், 30 கனிமத் தொகுதிகள் சுரங்க குத்தகை (எம்.எல்) மற்றும் மீதமுள்ள 46 கனிமத் தொகுதிகள் கலப்பு உரிமமாக (சி.எல்) ஏலம் விடப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஏலம் விடப்பட்ட 335 பிளாக்குகளில் 46 பிளாக்குகள் செயல்பாட்டில் உள்ளன. 2023-ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முறையே 22 மற்றும் 16 பிளாக்குகளை வெற்றிகரமாக ஏலம் எடுத்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் மொத்தம் 33 இரும்புத் தாது கனிமங்கள் ஏலம் விடப்பட்டன. இது 2022 ஆம் ஆண்டில் அதிக கனிமத் தொகுதிகளாகும். இதேபோல், இந்த ஆண்டும் அதிகபட்சமாக 24 இரும்புத்தாது கனிமங்களும், 20 சுண்ணாம்பு தாது கனிமங்களும் ஏலம் விடப்பட்டன.

 

******

(Release ID: 1991445)

 

 SMB/BR/KRS



(Release ID: 1991916) Visitor Counter : 63