பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 APR 2023 3:47PM by PIB Chennai

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு சிவராஜ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்குத் தலைமையேற்கும் திரு கிரிராஜ் அவர்களே, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே, எனது அன்பான சகோதர சகோதரிகளே இங்கு பெருந்திரளாக கூடியிருப்போரே!

இந்த வரலாற்று பூமியான ரேவாவிவின் அன்னை விந்தியவாசினியை வணங்குகிறேன். இந்த நிலம் தைரியசாலிகளுக்குச் சொந்தமானது; நாட்டுக்காக தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பவர்களுக்கு சொந்தமானது. நான் ரேவாவில் எண்ணற்ற முறை உங்களிடையே வந்திருக்கிறேன். உங்களின் அளவற்ற அன்பையும் பாசத்தையும் நான் எப்போதும் பெற்று வருகிறேன். இன்றைக்கும் நீங்கள் அனைவரும் எங்களை ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாட்டின் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பஞ்சாயத்துகளுக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இன்று, உங்களுடன், 30 லட்சத்துக்கும் பஞ்சாயத்து பிரதிநிதிகளும் எங்களுடன் மெய்நிகர் முறையில் இணைக்கப்பட்டுள்ளனர். இது நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான நிகழ்வாகும். நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகள். நாம் அனைவரும் இந்த நாட்டுக்கு, இந்த ஜனநாயகத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நமது பணியின் நோக்கம் வேறுபட்டிருக்கலாம், ஆனால் குறிக்கோள் ஒன்றுதான் - பொது சேவை முதல் தேசத்திற்கான சேவை வரை. கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் நமது ஊராட்சிகள் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சகோதர சகோதரிகளே,

இ-கிராம் ஸ்வராஜ் மற்றும் ஜி.இ.எம் போர்ட்டலை இணைப்பதன் மூலம் இன்று இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அமைப்புடன் உங்கள் பணி எளிதாக இருக்கும். பிரதமரின் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் நாட்டின் 35 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று, மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி தொடர்பான 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் தொடக்க விழாவும் நடைபெற்றுள்ளது. ரயில்வே திட்டங்கள், ஏழைகளுக்கு அனைத்து வசதி வீடுகள் மற்றும் நீர் தொடர்பான திட்டங்கள் இதில் அடங்கும். கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்கும் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்கள்

சுதந்திரத்தின் இந்த 'அமிர்த காலத்தால்' நாம் அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கனவு கண்டிருக்கிறோம், அதை நிறைவேற்ற இரவும் பகலும் உழைத்து வருகிறோம். இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய, இந்திய கிராமங்களின் சமூக அமைப்பை மேம்படுத்துவது அவசியம். இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்ய, இந்திய கிராமங்களின் பொருளாதார அமைப்பை மேம்படுத்துவது அவசியம். இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்ய, இந்தியாவில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்து முறையை மேம்படுத்துவதும் அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முந்தைய அரசுகளின் பாகுபாடுகளுக்கு மாறாக ஊராட்சிகளுக்கு எவ்வாறு அதிகாரம் அளித்து, ஊராட்சிகளில் வசதிகளை மேம்படுத்தி வருகிறோம் என்பதை இன்று நாடு முழுவதும் உள்ள கிராம மக்கள் பார்த்து வருகின்றனர்.

நண்பர்களே

ஊராட்சிகளின் உதவியுடன் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளியை தொடர்ந்து குறைத்து வருகிறோம். டிஜிட்டல் புரட்சியின் இந்த சகாப்தத்தில், பஞ்சாயத்துகளும் ஸ்மார்ட் ஆக்கப்படுகின்றன. இன்று, திட்டமிடல் முதல் செயல்படுத்துதல் வரை பஞ்சாயத்து மட்டத்தில் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அமிர்த நீர்நிலைகள் கட்டுமானத்திற்காக நீங்கள் நிறைய செய்கிறீர்கள். இவற்றுக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் அவற்றை முடிப்பது வரை ஒவ்வொரு மட்டத்திலும் நிறைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று, இ-கிராம ஸ்வராஜ் - ஜிஇஎம் ஒருங்கிணைந்த போர்ட்டலும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சிகள் மூலம் கொள்முதல் செய்யும் நடைமுறை எளிமையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கும். பஞ்சாயத்துகள் இப்போது குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும், மேலும் உள்ளூர் சிறு தொழில்களும் தங்கள் பொருட்களை விற்க ஒரு சக்திவாய்ந்த ஊடகத்தைப் பெறும். மாற்றுத் திறனாளிகளுக்கான முச்சக்கர வண்டிகள் அல்லது குழந்தைகளின் கல்வி தொடர்பான பொருட்கள் என அனைத்தும் இந்த இணையதளத்தில் ஊராட்சிகளுக்கு எளிதாகக் கிடைக்கும்.

சகோதர சகோதரிகளே,

பிரதமர் ஸ்வமித்வா திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மற்றொரு நன்மையையும் நாம் காணலாம். கிராமங்களில் உள்ள வீடுகளின் சொத்து ஆவணங்கள் தொடர்பாக நிறைய குழப்பங்கள் இருந்தன. இதனால், தகராறுகள் ஏற்படுவதுடன், சட்ட விரோதமாக வைத்திருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் பிரதமரின் ஸ்வமித்வா திட்டம் மூலம் தீர்க்கப்படுகின்றன. தற்போது, ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், சட்ட ஆவணங்கள் பாரபட்சமின்றி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நாடு முழுவதும் 75,000 கிராமங்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் மத்தியப் பிரதேச அரசு மிகவும் பாராட்டத்தக்க பணியைச் செய்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

பிரதமரின் சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சாரம் பெற்ற 2.5 கோடி வீடுகளில் பெரும்பாலானவை கிராமங்களைச் சேர்ந்தவை. அவர்கள் கிராமங்களில் வாழும் எனது சகோதர சகோதரிகள். எங்கள் அரசு கிராம மக்களுக்காக வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக, நாட்டின் ஒன்பது கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் வெறும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் வீட்டிலேயே குழாய் நீரைப் பெறத் தொடங்கியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலும், கிராமங்களில் வசிக்கும், 13 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே, குழாய் நீர் கிடைத்து வந்தது. கடந்த அரசுகளின் ஆட்சிக் காலத்தில் இந்த எண்ணிக்கையை நான் மேற்கோள் காட்டுகிறேன். இன்று, மத்தியப் பிரதேசத்தின் கிராமங்களில் சுமார் 60 லட்சம் வீடுகளை குழாய் நீர் அடையத் தொடங்கியுள்ளது. இந்த விஷயத்தில் உங்கள் மாவட்டம் 100 சதவீதமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

இன்று, சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பிரச்சாரமும் இங்கு தொடங்கப் பட்டுள்ளது. இது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அனைவரின் முயற்சி உணர்வை வலுப்படுத்தும். ஒவ்வொரு பஞ்சாயத்தும், ஒவ்வொரு அமைப்பின் பிரதிநிதியும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ந்த இந்தியாவிற்காக ஒன்றிணைய வேண்டும். ஒவ்வொரு அடிப்படை வசதியும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் 100% பயனாளிகளை விரைவாக சென்றடையும் போது மட்டுமே இது சாத்தியமாகும். இதில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானது.

நண்பர்களே,

மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும், தொடக்க விழாவும் பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று நடைபெற்றுள்ளது. சிந்த்வாரா-நைன்பூர்-மாண்ட்லா கோட்டை ரயில் பாதையை மின்மயமாக்குவது இந்த பகுதி மக்களின் தில்லி-சென்னை மற்றும் ஹவுரா-மும்பைக்கான இணைப்பை மேலும் எளிதாக்கும். இது நமது பழங்குடி சகோதர, சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று சிந்த்வாராவிலிருந்து நைன்பூருக்கு புதிய ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில்கள் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை தங்கள் மாவட்ட தலைமையகமான சிந்த்வாரா, சியோனியுடன் நேரடியாக இணைக்க உதவும். இந்த ரயில்களின் உதவியுடன், நாக்பூர் மற்றும் ஜபல்பூருக்கு செல்வதும் எளிதாக இருக்கும். இன்று தொடங்கப்பட்ட புதிய ரேவா-இட்வாரி-சிந்த்வாரா ரயில் சியோனி மற்றும் சிந்த்வாராவை நாக்பூருடன் நேரடியாக இணைக்கும். இந்த பகுதி முழுவதும் வனவிலங்குகளுக்கு மிகவும் பிரபலமானது. இங்கு அதிகரித்து வரும் இணைப்பு சுற்றுலாவை அதிகரிக்கும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் விவசாயிகள், மாணவர்கள், தினசரி பயணிகள், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள். அதாவது, இரட்டை இயந்திர அரசு இன்று உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் பஞ்சாயத்து ராஜ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி!

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

பாரத் மாதா கி - ஜெய்!

***

(Release ID: 1919179)

ANU/SMB/RR/KRS


(Release ID: 1990561)