சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் இந்தியா இணைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2023 5:46PM by PIB Chennai

ஐநா-வின் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக உணவு அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக்கிய சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பான கோடெக்ஸ் அலிமென்டரியஸ் ஆணையத்தின் (சி.ஏ.சி) நிர்வாகக் குழுவில், ஆசிய பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ரோமில் உள்ள உலக உணவு அமைப்பான எஃப்.ஏ.ஓ தலைமையகத்தில் நடைபெற்ற கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தின் (சி.ஏ.சி) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தியா இந்த உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது.

செயற்குழு சி.ஏ.சி-யின் ஒரு முக்கிய அங்கமாகும். உறுப்பு நாடுகள் அதன் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவதில் கணிசமான ஆர்வத்தைக் கொண்டுள்ளன. தற்போது நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளதன் மூலம், பல்வேறு உணவுப் பொருட்களின் சர்வதேச தர நிர்ணய செயல்முறையில் கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை இந்தியா பெறும். அதோடு மட்டுமல்லாமல், முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் ஈடுபட முடியும். 

நிர்வாகக் குழுவில் தலைவர், மூன்று துணைத் தலைவர்கள், ஆறு பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கோடெக்ஸின் அமைப்பில் இடம்பெற்றுள்ள பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பிரதிநிதிகள் உள்ளனர்.

 

சிறுதானியங்களுக்கு தரங்களை அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவும் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் சிறுதானியங்களுக்கு உலகளாவிய தரத்தை நிறுவுவதற்கான இந்தியாவின் முன்முயற்சியை ஆணையம் அங்கீகரித்ததோடு உறுப்பு நாடுகளாலும் அது ஆதரிக்கப்பட்டது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத் தலைமைச் செயல்  அதிகாரி திரு ஜி கமலவர்தன ராவ் தலைமையில் இந்தியத் தூதுக்குழு ரோம் சென்றிருந்தது.  

*******

ANU/AD/PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1982013) வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu