பிரதமர் அலுவலகம்

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்


பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையம் தொடக்கம்

தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000-வது மக்கள் மருந்தகத்தை அர்ப்பணித்தார்

நாட்டில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டம் தொடக்கம்

"வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை அரசு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றுவதையும், அதன் நன்மைகள் நாடு முழுவதும் உள்ள மக்களை சென்றடைவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று பிரதமர் கூறினார்

"மோடி உத்தரவாத வாகனம்" இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை சென்றடைந்துள்ளது, அங்கு சுமார் 30 லட்சம் மக்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்

"வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை அரசாங்க முயற்சியிலிருந்து ஒரு வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது"

"வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை இதுவரை விடுபட்டவர்களுக்கு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது"

"மற்றவர்களின் எதிர்பார்ப்பு முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது"

"மகளிர் சக்தி, இளைஞர்களின் சக்தி, விவசாயிக

Posted On: 30 NOV 2023 1:55PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000 வது மக்கள் மருந்தகத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குதல் மற்றும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்துதல் ஆகிய இந்த இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். அதன்படி இந்த நிகழ்வின் மூலம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் தியோகர், ஒடிசாவின் ராய்கர்ஹா, ஆந்திராவின் பிரகாசம், அருணாச்சல பிரதேசத்தின் நம்சாய் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அர்னியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை இன்றுடன் 15 நாட்களை நிறைவு செய்துள்ளதாகவும், தற்போது வேகமெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் அன்பும் பங்களிப்பும் யாத்திரை வாகனத்தின் பெயரை 'சபத யாத்திரை' என்பதிலிருந்து 'மோடியின் உத்தரவாத வாகனம்' என்று மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை பயனாளிகளுடன் உரையாடியதில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், மேலும் அவர்களின் உற்சாகம், மற்றும் ஊக்கம், உறுதியையும் பாராட்டினார். 'மோடியின் உத்தரவாத வாகனம்' இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை சென்றடைந்துள்ளது, அங்கு சுமார் 30 லட்சம் மக்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையில் பெண்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். "ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு நபரும் வளர்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொள்கிறார்கள்" என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த இயக்கம் ஒரு அரசு முன்முயற்சியிலிருந்து ஒரு பொது இயக்கமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடக தளங்களில் புதிய மற்றும் பழைய பயனாளிகள் மற்றும் இந்த யாத்திரையுடன் ஈடுபடுபவர்களால் அதிகரித்த டிஜிட்டல் செயல்பாடுகளை கவனித்த திரு. மோடி, இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நமோ செயலியில் பதிவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். "இளைஞர்கள் இந்த யாத்திரையின் தூதர்களாக மாறியுள்ளனர்", என்று அவர் கூறினார். 'மோடி உத்தரவாத வாகனத்தை' வரவேற்க பல இடங்களில் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கிராமங்களின் தூய்மையில்  இந்த இயக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.  இந்தியா இப்போது அசைக்க முடியாத, சோர்வற்ற நிலையில் உள்ளது. இந்திய மக்கள்தான் அதை வளர்ந்த நாடாக மாற்ற முடிவு எடுத்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த பண்டிகை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்ற முன்னெடுப்பையும் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

இந்த இயக்கத்தை வெற்றிகரமாக வரவேற்பதற்கு அரசின் மீதான நம்பிக்கையையும், அதன் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். வீடுகள், கழிவறைகள், மின்சாரம், எரிவாயு இணைப்புகள், காப்பீடு அல்லது வங்கிக் கணக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு புறக்கணித்த காலகட்டத்தின் போது, லஞ்சம் போன்ற ஊழல் நடைமுறைகள் பரவலாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். திருப்திப்படுத்துதல் மற்றும் வாக்கு வங்கியின் அரசியலை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அதுபோன்ற அரசுக்கு மக்களின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

தற்போதைய அரசே, மோசமான கடந்த கால நிர்வாகத்தை நல்லாட்சியாக மாற்றியுள்ளது. அதனை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிமைகளை அரசு வழங்க வேண்டும். இது இயற்கை நீதி, இதுதான் சமூக நீதி" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையின் காரணமாக, ஒரு புதிய அபிலாஷை எழுந்துள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்களிடையே புறக்கணிப்பு உணர்வு முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். "மற்றவர்களின் எதிர்பார்ப்பு முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது" என்று திரு மோடி தெரிவித்தார்.

"வளர்ந்த இந்தியாவின் உறுதி, மோடி அல்லது எந்தவொரு அரசின் உறுதியும் அல்ல, இது அனைவரையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான உறுதி" என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை அரசின் திட்டங்களையும், நன்மைகளையும் பின்தங்கியவர்களுக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். நமோ செயலியின் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பழங்குடி பகுதிகளில் ட்ரோன் செயல்விளக்கங்கள், சுகாதார பரிசோதனை முகாம்கள் மற்றும் அரிவாள்  செல் எனும் ரத்த சோகை நோய்க்கான ஆய்வு முகாம்களை முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இயக்கத்தின்  வருகையால் பல பஞ்சாயத்துகள்  ஏற்கனவே  இலக்கை அடைந்துள்ளதாகவும், பின்தங்கியுள்ள பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். உஜ்வாலா மற்றும் ஆயுஷ்மான் கார்டுகள் போன்ற பல திட்டங்களுடன் பயனாளிகள் உடனடியாக இணைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், முதல் கட்டமாக 40,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இளைஞர்கள் எனது பாரதம் தன்னார்வலர்களாக பதிவு செய்து மை பாரத் இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த யாத்திரை 4 மிர்த தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை  இந்த இயக்கத்தின் தொடக்கத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் மகளிர் சக்தி, இளைஞர் சக்தி, இந்தியாவின் விவசாயிகள் மற்றும் ஏழைக் குடும்பங்கள் ஆகியோரை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த நான்கு தூண்களின் முன்னேற்றம் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏழைக் குடும்பங்களில் இருந்து வறுமையை விரட்டவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியப் பெண்களின் பிரச்சனைகளைச் சமாளிப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கவும், இந்திய விவசாயிகளின் வருமானம் மற்றும் திறன்களை மேம்படுத்தவும் அரசு பாடுபடுகிறது என்று திரு. மோடி கூறினார். "ஏழைகள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படும் வரை ஓயப்போவதில்லை" என்று பிரதமர் மோடி கூறினார்.

விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை வழங்குதல் தொடர்பான மற்ற இரண்டு முன்னேற்றங்களைப் பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையங்களின் தொடக்கம் குறித்து பேசிய பிரதமர், தனது சுதந்திர தின உரையின் போது மகளிருக்கான ட்ரோன் பற்றிய தனது அறிவிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். வரும் காலங்களில் ட்ரோன் இயக்குபவர்களுக்கான பயிற்சியுடன் 15,000 சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை தன்னிறைவு அடையச் செய்வதற்கான இயக்கம்  மகளிருக்கான ட்ரோன் மூலம் வலுப்படுத்தப்பட்டு கூடுதல் வருமானத்திற்கான வழிகளை வழங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம், நாட்டின் விவசாயிகள் ட்ரோன்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை மிகக் குறைந்த செலவில் பெற முடியும், இது மருந்து மற்றும் உரங்களை தெளிப்பதற்கான நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்று பிரதமர் கூறினார்.

10,000-வது மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த திரு. மோடி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான மையமாக இது மாறியுள்ளது என்று கூறினார். மக்கள் மருந்தகங்கள் இப்போது 'மோடியின் மருந்துக் கடை' என்று அழைக்கப்படுகின்றன என்று பிரதமர் மேலும் கூறினார். இந்த மையங்களில் சுமார் 2000 வகையான மருந்துகள் 80 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டத்தைத் தொடங்கியதற்காக நாட்டின் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். "மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றத்திற்கான உத்தரவாதத்தைக் குறிக்கிறது", என்று அவர் மேலும் கூறினார்.

உரையை நிறைவு செய்த பிரதமர், இந்த முழு இயக்கத்தையும் தொடங்குவதில் முழு அரசு இயந்திரம் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றியடைந்த கிராம சுயசார்பு திட்டத்தைப் பற்றி நினைவு கூர்ந்த அவர், நாட்டின் சுமார் 60 ஆயிரம் கிராமங்களில் இரண்டு கட்டங்களாக இந்த இயக்கம் நடத்தப்பட்டதாகவும், ஏழு திட்டங்கள் பயனாளிகளிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். "ஆர்வமுள்ள மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களும் இதில் சேர்க்கப்பட்டன", என்று அவர் மேலும் கூறினார். நாட்டிற்கும், சமூகத்திற்கும் சேவை செய்வதற்காக இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள அரசு பிரதிநிதிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார். "முழு நேர்மையுடன் உறுதியாக இருங்கள், ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையுங்கள். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை, அனைவரின் முயற்சிகளால் மட்டுமே நிறைவடையும்" என்று திரு மோடி தனது உரையை முடித்தார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து பயனாளிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.

பின்னணி

அரசின் முக்கியத் திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் சபத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியாகும். இதன் மற்றொரு படியாக, பிரதமரின்  மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தை பிரதமர்  தொடங்கிவைத்தார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும், இதன் மூலம் அவர்கள் வாழ்வாதார உதவிக்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள்  வழங்கப்படும். ட்ரோன்களை பறக்க வைக்கவும், பயன்படுத்தவும் பெண்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். இந்த முயற்சி விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.

சுகாதாரத்தை மலிவு விலையிலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஆரோக்கியமான இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் அடித்தளமாகும். மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தை நிறுவியது இந்த திசையில் ஒரு முக்கிய முன்முயற்சியாகும். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸில் வரலாற்று சிறப்புமிக்க 10,000 வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

***

ANU/SMB/BS/AG/KPG

 



(Release ID: 1981274) Visitor Counter : 129