நிலக்கரி அமைச்சகம்
வர்த்தக நிலக்கரி சுரங்கம் மற்றும் சுரங்க மேம்பாட்டாளர்கள் மற்றும் இயக்குவோருக்கான தனித்தன்மை வாய்ந்த கடன்-நிதி குறித்த பயிலரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2023 2:02PM by PIB Chennai
'வணிக சுரங்கம் மற்றும் சுரங்க மேம்பாட்டாளர்கள் மற்றும் இயக்குவோருக்கான தனித்தன்மை வாய்ந்த கடன்-நிதி' குறித்த பயிலரங்கை ஊரக மின்மயக் கழகம் (ஆர்.இ.சி லிமிடெட்) அண்மையில் புதுதில்லியில் நடத்தியது இந்தப் பயிலரங்கில் நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா, நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நியமன அதிகாரி திரு எம் நாகராஜு, ஆர்இசி லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு விவேக் குமார் தேவாங்கன் மற்றும் நிலக்கரி த் தொழில்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுரங்கத் தொழிலின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பங்காளியாக இருக்க ஆர்.இ.சி தயாராக இருப்பதாக திரு தேவாங்கன் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.
சிறப்புரையாற்றிய நிலக்கரித் துறை செயலாளர் திரு. அம்ரித் லால் மீனா, வணிக நிலக்கரிச் சுரங்கங்களுக்குக் கடன் கிடைப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பொருத்தமான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.சுரங்கத் துறையின் நிலையான வளர்ச்சி, நிதி நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டையும், சுரங்கத் துறையின் வளர்ச்சி பயணத்தில் ஒரு பங்காளியாக இருப்பதற்கான விருப்பத்தையும் திரு மீனா பாராட்டினார். நிலத்தடி சுரங்கங்களில் இருந்து உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். நிலக்கரித் துறை வளர்ச்சிக் கட்டத்தில் இருப்பதாகவும் , அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்ய அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் 91 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக பயன்பாட்டிற்காக ஏலம் விட்டுள்ளதாகவும் கூடுதல் செயலாளரும் நியமன அதிகாரியுமான (நிலக்கரி) திரு எம்.நாகராஜு தெரிவித்தார். ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டு நிலக்கரி சுரங்க நிதி திட்டங்களுக்கான நிதி மதிப்பீடு இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தனிநபர் மின் பயன்பாடு உலக சராசரியில் மூன்றில் ஒருபங்கு என்றும், இது கணிசமாக அதிகரிக்கும் என்றும் பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் நிலையங்களால் பங்களிக்கப்படும்.
இந்தப் பயிலரங்கில் பங்கேற்ற நிலக்கரி சுரங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களின் எம்.டி.ஓ.க்கள், தற்சார்பு இந்தியா என்பதை நோக்கி நிலக்கரித் துறையை ஆதரிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மற்றும் ஆர்.இ.சி எடுத்த முயற்சிகளைப் பாராட்டினர்.
*****
ANU/PKV/SMB/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1974127)
வருகையாளர் எண்ணிக்கை : 177