பிரதமர் அலுவலகம்

9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

"இந்த உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்ற நடைமுறைகளின் தனித்துவமான சங்கமமாகும்"

"ஜனநாயகத்தின் தாய் என்று மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் அறியப்படும் மண்ணில் சபாநாயகர்கள் 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது"

உலகின் மிகப்பெரிய தேர்தலை இந்தியா நடத்துவது மட்டுமின்றி, அதில் மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

"இந்தியா தேர்தல் நடைமுறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது"

"இந்தியா இன்று ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது"

" மனிதகுலம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்குப் பிளவுபட்ட உலகம் தீர்வுகளை வழங்க முடியாது"

"இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தருணம், ஒன்றாக செல்ல வேண்டிய தருணம். இது அனைவரின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான தருணம். உலகளாவிய நம்பிக்கை நெருக்கடியை சமாளித்து, மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையுடன் நாம் முன்னேற வேண்டும்.”

Posted On: 13 OCT 2023 12:37PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் 9 வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை (பி20) இன்று தொடங்கி வைத்தார். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்' என்ற கருப்பொருளுடன் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சி மாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்றார். "இந்த உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளின் 'மகா கும்பமேளா' ஆகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று கலந்து கொண்ட அனைத்துப் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றக் கட்டமைப்பின் அனுபவத்தைக் கொண்டுள்ளனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, இன்றைய நிகழ்வு குறித்து மிகுந்த திருப்தி தெரிவித்தார்.

 

இந்தியாவின் பண்டிகைக் காலம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியா தலைமையின் கீழ் ஜி20 தொடர்பான நிகழ்வுகள், ஜி20 கொண்டாட்டங்கள், பல நகரங்களில் பரவியதால் ஜி20 ஆண்டு முழுவதும் பண்டிகை உற்சாகத்தைத் தொடர்ந்தது என்று கூறினார்.

 

வெற்றிகரமான ஜி 20 உச்சி மாநாடு, பி 20 உச்சி மாநாடு சந்திரயான் நிலவில் தரையிறங்கியது போன்ற நிகழ்வுகளால் இந்தக் கொண்டாட்டங்கள் அதிகரித்தன. "ஒரு நாட்டின் மிகப்பெரிய பலம் என்பது அதன் மக்களும் அவர்களின் மன உறுதியும், அதைக் கொண்டாடுவதற்கான ஒரு வழிதான் இந்த உச்சிமாநாடு", என்று அவர் கூறினார்.

 

ஜனநாயகத்தின் தாய் என்பது மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் அறியப்படும் நாட்டில் பி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது என்று பிரதமர் கூறினார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், விவாதங்களின் முக்கியத்துவத்தைப் பிரதமர் சுட்டிக் காட்டினார், வரலாற்றில் இருந்து விவாதங்களின் துல்லியமான எடுத்துக்காட்டுகளை அவர் குறிப்பிட்டார். ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தியாவின் வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் மற்றும் குழுக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றில் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் பழைய வேதமான ரிக்வேதத்தைப் பற்றி பேசிய பிரதமர், 'நாம் ஒன்றாக நடக்க வேண்டும், ஒன்றாகப் பேச வேண்டும், நம் மனம் ஒன்றிணைய வேண்டும்' என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை குறிப்பிட்டார். கிராம அளவிலான பிரச்சனைகள், இத்தகைய கூட்டங்களில் விவாதங்கள் மூலம் தீர்க்கப்பட்டது, கிரேக்க தூதர் மெகஸ்தனிஸுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, அவர் அதைப் பற்றி விரிவாக எழுதினார் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் உள்ள 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அந்த கல்வெட்டில் கிராம சட்டமன்ற விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. "1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வதற்கான விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன", என்று அவர் மேலும் கூறினார்.

 

 இந்தியாவில் 12 ஆம் நூற்றாண்டிலிருந்து நடந்து வரும் அனுபவ் மந்தப்பா பாரம்பரியம் குறித்துப் பேசிய பிரதமர், மேக்னா கார்ட்டா உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து சாதி, மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த விவாதங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்று தெரிவித்தார்

 

 "ஜகத்குரு பசவேஸ்வரரால் தொடங்கப்பட்ட அனுபவ் மந்தப்பா இன்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது" என்று குறிப்பிட்ட பிரதமர், 5000 ஆண்டுகள் பழமையான வேதங்களில் இருந்து இன்று வரையிலான இந்தியாவின் நாடாளுமன்றப் பாரம்பரியப் பயணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 

இந்தியாவின் நாடாளுமன்ற மரபுகளின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி மற்றும் காலத்திற்கேற்ப வலுப்படுத்துதல் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் 17 பொதுத் தேர்தல்களும், 300-க்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களும் நடந்துள்ளன. இந்த மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையில் மக்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

தனது கட்சி ஆட்சிக்கு வந்த 2019 பொதுத் தேர்தல் மனித வரலாற்றின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறை என்றும், அதில் 600 மில்லியன் வாக்காளர்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில், 910 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர், இது முழு ஐரோப்பாவின் மக்கள்தொகையை விட அதிகமாகும் என்று அவர் கூறினார். இவ்வளவு பெரிய வாக்காளர்களிடையே 70 சதவீத இந்தியர்கள் தங்கள் நாடாளுமன்ற நடைமுறைகள் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையை இது காட்டுகிறது. 2019 தேர்தலில் பெண்களின் பங்களிப்பு சாதனையாக இருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் 600-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றதாகவும், 10 மில்லியன் அரசு ஊழியர்கள் தேர்தல்களை நடத்துவதில் பணியாற்றியதாகவும், வாக்களிப்பதற்காக 1 மில்லியன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.

 

தேர்தல் நடைமுறைகளை நவீனப்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார். கடந்த 25 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் கொண்டு வந்துள்ளது, ஏனெனில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 1 பில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்த அவர், தேர்தல் நடைமுறைகளை நேரில் அறிய வருமாறு வெளிநாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கும் சமீபத்திய முடிவு குறித்துப் பிரதமர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான பிரதிநிதிகளில், சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அவர் கூறினார். இந்தியா இன்று ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. நமது நாடாளுமன்றம் அண்மையில் எடுத்த முடிவு நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்தும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

 

இந்தியாவின் நாடாளுமன்ற மரபுகள் மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துரைத்த பிரதமர், அதன் பன்முகத்தன்மை, உயிர்ப்பு ஆகியவற்றைப் பாராட்டினார். இங்கு அனைத்து மதத்தினர், நூற்றுக்கணக்கான உணவு வகைகள், வாழ்க்கை முறைகள், மொழிகள், பேச்சுவழக்குகள் உள்ளன", என்று பிரதமர் கூறினார்.

 

மக்களுக்கு நிகழ்நேர தகவல்களை வழங்க இந்தியாவில் 28 மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன, சுமார் 200 மொழிகளில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன, மேலும் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் சுமார் 3 பில்லியன் பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் பெருமளவிலான தகவல் பரிமாற்றம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் அளவை திரு மோடி  குறிப்பிட்டார். "இந்த, 21 ஆம் நூற்றாண்டு உலகில் இந்தியாவின் இந்தத் துடிப்பும் உயிர்ப்பு, வேற்றுமையில் ஒற்றுமையுமே நமது மிகப்பெரிய பலம். ஒவ்வொரு சவாலையும் எதிர்த்துப் போராடவும், ஒவ்வொரு  சிக்கலையும்,  ஒன்றிணைந்து தீர்க்கவும் இந்தத் துடிப்பு நம்மைத் தூண்டுகிறது" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

 

உலகின் ஒன்றோடொன்று தொடர்புடைய இயல்பைக் குறிப்பிட்ட பிரதமர், மோதல் நிறைந்த உலகம் யாருடைய நலனுக்கும் உகந்ததல்ல என்று கூறினார். "பிளவுபட்ட உலகம் மனிதகுலம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்குத் தீர்வுகளை வழங்க முடியாது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கான  தருணம், ஒன்றிணைந்து செல்ல வேண்டிய தருணம். இது அனைவரின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான தருணம். உலகளாவிய நம்பிக்கை நெருக்கடியை சமாளித்து, மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையுடன் நாம் முன்னேற வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் நாம் உலகைப் பார்க்க வேண்டும்.

 

 உலகளாவிய முடிவுகளை எடுப்பதில் பரந்த பங்கேற்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி -20 அமைப்பில் சேர்த்ததற்கான முன்மொழிவின் பின்னணியில் இந்த அம்சமே உள்ளது, இது அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார். பி20 மன்றத்தில் ஆப்பிரிக்கா பங்கேற்பது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

மக்களவை சபாநாயகர், பிரதிநிதிகளை புதிய நாடாளுமன்றத்திற்கு சுற்றுப் பயணமாக அழைத்துசென்றது குறித்துப் பேசிய பிரதமர், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா பல தசாப்தங்களாக எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதன் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூர்ந்த திரு மோடி, எம்.பி.க்களை பிணைக் கைதிகளாக பிடித்து அவர்களை அழிக்க பயங்கரவாதிகள் தயாராக இருந்தனர். "இதுபோன்ற பல பயங்கரவாத சம்பவங்களை எதிர்கொண்டு அதற்கு எதிராக இந்தியா இந்த நிலையை அடைந்துள்ளது", என்று அவர் கூறினார், ஏனெனில் பயங்கரவாதத்தின் மிகப்பெரிய சவாலை உலகமும் உணர்ந்துள்ளது. "பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், எந்தக் காரணத்திற்காக எந்த வடிவத்தில் நடந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது" என்று கூறிய திரு மோடி, அத்தகைய சூழ்நிலையைக் கையாளும் போது சமரசமின்றி இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பயங்கரவாதத்தின் வரையறை தொடர்பாக உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாதது குறித்தும் பிரதமர் தெரிவித்தார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச உடன்படிக்கை ஐ.நா.வில் ஒருமித்த கருத்துக்காக இன்றும் காத்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மனிதகுலத்தின் எதிரிகள் உலகின் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று  கவலை தெரிவித்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

தனது உரையை நிறைவு செய்த பிரதமர், உலகின் சவால்களை எதிர்கொள்ள பொதுமக்களின் பங்களிப்பை விட சிறந்த ஊடகம் எதுவும் இருக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டினார். "அரசுகள் பெரும்பான்மையால் அமைக்கப்படுகின்றன, ஆனால் நாடு ஒருமித்த கருத்தால் நடத்தப்படுகிறது என்று நான் எப்போதும் நம்புகிறேன். நமது நாடாளுமன்றங்களும் இந்த பி20 மன்றமும் இந்த உணர்வை வலுப்படுத்த முடியும்" என்று கூறிய பிரதமர், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் இந்த உலகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நிச்சயமாக வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அனைத்து நாடாளுமன்ற சங்கத் தலைவர் டுவார்டே பச்சேகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9 வது பி 20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்' என்பதாகும். ஜி 20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் அழைப்பாளர் நாடுகளின் சபாநாயகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இயற்கையுடன் இணக்கமாக பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய முன்முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக 12 அக்டோபர் 2023 அன்று லைஃப் (சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை) குறித்த உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாடாளுமன்ற  அமைப்பின் கூட்டமும் நடைபெற்றது.

***

(Release ID: 1967302)

ANU/SMB/BS/AG/KRS



(Release ID: 1967434) Visitor Counter : 149