சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மகளிர் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிவித்து வருகிறார் - மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கோவையில் பேச்சு

Posted On: 23 SEP 2023 2:50PM by PIB Chennai

கோயம்புத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, 'New India Debates' எனும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், 'மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.

சமூக முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்திலும் மகளிருக்கு இந்த ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்றனர். சந்திராயன் 3 திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்கு வகித்தனர். ஐஐடி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

முன்பு பிரசவத்திற்காக முறையாக மருத்துவமனைகளுக்கு மகளிர் செல்வதில்லை. கடந்த 9 ஆண்டுகளில் 94 சதவீதம் பெண்கள் பிரசவத்திற்காக முறையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாயும் சேயும் பாதுகாக்கப்படுகின்றனர். இதற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு எல்.பி.ஜி கேஸ் இணைப்பு 14.5 கோடியாக இருந்தது. இன்று 33 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எளிய மக்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சையை ரூபாய் 5 லட்சத்திற்கு பெற முடிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை 7லிருந்து 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக 700 மருத்துவக் கல்லூரிகள் பிரதமர் மோடி அவர்களால் துவங்கப்பட்டுள்ளது. மக்கள் மருந்தகங்கள் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறன்றன.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 70% மகளிர் பயனடைகின்றனர். மேலும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 40 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 75% பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மகளிர் சிறப்பாக வாழ்வதற்காகவும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு அவர்களை லட்சாதிபதிகளாக ஆக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், தேசத்தின் பாதுகாப்புப் பணியில் மகளிர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மகளிர் சக்திக்கு உதாரணமாக இந்திய நாடாளுமன்றம் இயங்கி வருகிறது.

நமது நாட்டின் நிதி அமைச்சர், குடியரசுத் தலைவர் என பெண்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுகிறது.

சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த மகளிர் சிறப்பாக சாதனைகள் புரிந்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத் துறையில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாகப் பயன்கள் சென்றடைகின்றன.

வங்கிக் கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் தொழில்நுட்பம் மூலம் வெளிப்படையான அரசாங்கம் சாத்தியமாகியுள்ளது.

உலகின் 46 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் 185 மில்லியன் மக்கள் வறுமை கோட்டுப் பிரிவிலிருந்து முன்னேறியுள்ளனர்.

ஜி.எஸ்.டி முறை சிறப்பாக அமல்படுத்தப்பட்டு இன்று வரி வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. இவ்வாறு பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. யூனிகார்ன்கள், ஸ்டார்ட் அப்கள் என அனைத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து தொழில் முனைவோராக பெண்கள் உருவாகி வருகின்றனர். இவ்வாறு விஞ்ஞானம் முதல் சினிமா வரை அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது. அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது' என தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதிலளித்தார். இதனையடுத்து, 'New India Debates' அமைப்பின் சார்பில் நடைபெற்ற விநாடி வினாப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வினை அடுத்து ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.

*** 

AP/DL


(Release ID: 1959862)