மத்திய அமைச்சரவை

நகர பேருந்து இயக்கத்தை அதிகரிக்க “பிரதமரின்-மின்சார பேருந்து சேவை”-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை

Posted On: 16 AUG 2023 4:34PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 10,000 மின்சாரப் பேருந்துகள் மூலம் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை மேம்படுத்தும் "பிரதமரின்-மின்சார பேருந்து சேவை" என்ற பேருந்துத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.57,613 கோடி செலவாகும். இதில் ரூ.20,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பேருந்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை இத்திட்டம் உள்ளடக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கம்:

நகரப் பேருந்து சேவையில் சுமார் 10,000 பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இந்தத் திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

பிரிவு ஏ-நகரப் பேருந்து சேவைகளை அதிகரித்தல்: (169 நகரங்கள்)

அங்கீகரிக்கப்பட்ட பேருந்து திட்டம் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மாதிரியில் 10,000 மின்சார பேருந்துகளுடன் நகரப் பேருந்து நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

தொடர்புடைய உள்கட்டமைப்பு பேருந்து பணிமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும்; மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்கட்டமைப்பை (துணை மின் நிலையம் போன்றவை) உருவாக்கும்.

பிரிவு பி-பசுமை நகர்ப்புற இயக்கம் முன்முயற்சிகள்: (181 நகரங்கள்)

பேருந்துக்கான முன்னுரிமை, உள்கட்டமைப்பு, பன்முனை வசதிகள், மின்னேற்றி நிலையங்கள் உள்கட்டமைப்பு போன்ற பசுமை முன்முயற்சிகளை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949430

***

AD/ANU/IR/RS/GK



(Release ID: 1949595) Visitor Counter : 247