பிரதமர் அலுவலகம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் பங்கேற்பு

கைத்தறி மற்றும் கதர் நெசவாளர்கள், கைவினைஞர்கள், ஜவுளித் துறையினர், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் என 3000 க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்

Posted On: 05 AUG 2023 8:01PM by PIB Chennai

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 7 ஆம் தேதி பங்கேற்கிறார். அன்று பகல் 12 மணிக்கு தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாட்டின் வளமான கலை மற்றும் கைவினைக் கலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் பிரதமர் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார். இந்த தொலைநோக்குப் பார்வையால்வழிநடத்தப்படும் அரசு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இந்த தினத்தின் முதல் கொண்டாட்டம் ஆகஸ்ட் 7, 2015 அன்று நடைபெற்றது. 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், உள்நாட்டு தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காகவும்  இந்த  தேதி  தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு, 9-வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனம் (என்ஐ.எஃப்.டி) உருவாக்கிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் கதர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் துறையினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள கைத்தறி குழுமங்கள், தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவன வளாகங்கள், நெசவாளர் சேவை மையங்கள், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன வளாகங்கள், தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய (கேவிஐசி) நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மாநில கைத்தறித் துறைகளை இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும்.

(Release ID: 1946100)

***

SM/PLM/KRS



(Release ID: 1946129) Visitor Counter : 182