உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

21 புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல்

Posted On: 27 JUL 2023 3:39PM by PIB Chennai

நாட்டில் புதிய பசுமை (கிரீன்ஃபீல்ட்) விமான நிலையங்களை அமைப்பதற்காக மத்திய அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் (ஜி.எஃப்.ஏ) கொள்கை, 2008-ஐ உருவாக்கியுள்ளது. இக்கொள்கையின்படி, மாநில அரசு உட்பட எந்தவொரு விமான நிலைய மேம்பாட்டு நிறுவனமும் விமான நிலையத்தை உருவாக்க விரும்பினால், அவர்கள் பொருத்தமான இடத்தைக் கண்டறிந்து, விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை நடத்தி, இட அனுமதிக்காக மத்திய அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து கொள்கை அளவில் ஒப்புதல் பெற வேண்டும்.

 

கோவாவில் மோபா, மகாராஷ்டிராவின் நவிமும்பை, ஷீரடி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கலபுரகி, விஜயபுரா, ஹாசன் மற்றும் சிவமொக்கா, மத்தியப் பிரதேசத்தின் டாப்ரா (குவாலியர்), உத்தரபிரதேசத்தில் குஷிநகர் மற்றும் நொய்டா (ஜேவார்), குஜராத்தில் தோலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால், ஆந்திராவில் தகதர்த்தி, போகபுரம் மற்றும் ஒர்வாகல், மேற்கு வங்கத்தின் துர்காபூர், சிக்கிமில் பாக்யாங், கேரளாவின் கண்ணூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் ஹோலோங்கி (இட்டாநகர்)  ஆகிய 21 புதிய பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய  அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இவற்றில் துர்காபூர், ஷீரடி, கண்ணூர், பாக்யாங், கலபுர்கி, ஓர்வாகல் (கர்னூல்), சிந்துதுர்க், குஷிநகர், இட்டாநகர், மோபா மற்றும் சிவமொக்கா ஆகிய 11 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

 

இது தவிர, பிராந்திய விமான இணைப்பை அதிகரிப்பதற்கும், விமானப் பயணத்தை மக்களுக்கு குறைந்த செலவில் வழங்குதற்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 21-10-2016 அன்று பிராந்திய இணைப்புத் திட்டமான ஆர்.சி.எஸ் - உடான் (உதேதேஷ்கா ஆம் நாகரிக்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

2016 ஆம் ஆண்டில் உடான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை, நாடு முழுவதும் 74 விமான நிலையங்கள் (ஹெலிபோர்ட்கள், நீர் விமான நிலையங்கள் மற்றும் கிரீன்ஃபீல்டு விமான நிலையங்கள் உட்பட) செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

மேற்குறிப்பிட்ட 21 பசுமை விமான நிலையங்களில், கோவாவில் மோபா, மகாராஷ்டிராவின் நவி மும்பை, புதுச்சேரியின் காரைக்கால், உத்தரப்பிரதேசத்தின் ஜேவர் (நொய்டா), குஜராத்தின் தோலேரா மற்றும் ஹிராசர் மற்றும் ஆந்திராவில் போகபுரம் ஆகிய 7 விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

திருப்பதி, விஜயவாடா, குஷிநகர், மோபா ஆகிய 4 விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு  வி.கே.சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

****


ANU/PLM/KRS



(Release ID: 1943464) Visitor Counter : 103


Read this release in: Bengali , Telugu , English , Urdu