தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஜெனிவாவில் நடைபெறும் 3-வது வேலைவாய்ப்புப்பணிக்குழுக் கூட்டம்

Posted On: 31 MAY 2023 6:59PM by PIB Chennai

இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் மூன்றாவது வேலைவாய்ப்பு பணிக்குழுக் கூட்டம் 2023 மே 31 முதல் ஜூன் 2 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறுகிறது. 20 ஜி-20 உறுப்பு நாடுகள், 9 நட்பு நாடுகள் மற்றும் 4 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 78 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

வேலைவாய்ப்பு பணிக்குழுவின் இந்த சந்திப்பு, இந்திய தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பணிக்குழு 2023-ன் 3 முக்கிய நோக்கங்கள் குறித்து ஜி-20 நாடுகளுக்கு இடையே ஒருமித்தக் கருத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளரும்,  வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் தலைவருமான திருமதி ஆர்த்தி அஹுஜாவின் தொடக்க உரையுடன் கூட்டம் தொடங்கியது. வேலைவாய்ப்புப் பணிக்குழு தனது பொறுப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரமணி பாண்டே, பிரதிநிதிகளை வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியத் தலைமையின் கீழ் வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் விரிவாக விவாதித்தனர். அடுத்த மாதம் இந்தியாவின் இந்தூரில் நடைபெறவுள்ள இறுதி வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக, இந்த சந்திப்பிலேயே ஒருமித்தக் கருத்தை உருவாக்க இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஜி-20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் குழுவானது, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளரால் வழிநடத்தப்படுவதோடு, இணைச் செயலாளர் ரூபேஷ் குமார் தாக்கூர், இயக்குநர் திரு.மகேந்திர குமார் உள்ளிட்ட குழுவினரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து வர்த்தகத்துறையைச் சேர்ந்த 20 பேர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் 20 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இந்திய தலைமைப் பொறுப்புக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.

******

AP/CR/KRS



(Release ID: 1928800) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Punjabi