சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழலுக்கேற்ப வாழ்க்கை முறை இயக்கத்தின்கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தூய்மை தொடர்பான இயக்கங்கள் மற்றும் யோகா நிகழ்ச்சிகள்

Posted On: 28 MAY 2023 8:51PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்  பருவநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை (லைஃப்) குறித்து பல்வேறு இயக்கங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

1. இயற்கை வரலாற்றுக்கான மண்டல அருங்காட்சியகம் (ஆர்எம்என்எச்)

மைசூரில் உள்ள ஆர்எம்என்எச் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தின் ஒரு பகுதியாக 28.05.2023 அன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. “பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 194 மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுற்றுச்சூழலுகேற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.

2. இந்திய விலங்கியல்  ஆய்வு நிறுவனம்

ஹைதராபாத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம், சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தின் கீழ், யோகா தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 700 பேர் இதில் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வுக்கு தலைமை விருந்தினராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி பங்கேற்றார். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கைமுறை உறுதி மொழி இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டது. யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகாவை பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் இதில் வலியுறுத்தப்பட்டது.

3. தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம், (என்சிஎஸ்சிஎம்)

சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை ஊக்குவிக்கும் முறையில், என்சிஎஸ்எம் நிறுவனம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடலோர தூய்மை இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது. 60 கிலோ மீட்டர் நீள கடலோரப்பகுதிகளில் இந்த தூய்மை இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மத்திய தொல்லியில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மகாபலிபுரம் சுற்றுலாத்தலத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சத்து 76 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளால் கடற்கரைப்பகுதிக்கு ஏற்படும் மாசினைத் தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடி மகாபலிபுரம் பயணம் மேற்கொண்ட போது, அவரே முன்னுதாரணமாக செயல்பட்டு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது.

******

SRI/PLM/RS/KRS



(Release ID: 1928118) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi , Telugu