மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆதார் அங்கீகாரம் ஏப்ரல் மாதத்தில் 1.96 பில்லியனை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தை விட 19% அதிகம்

Posted On: 22 MAY 2023 5:40PM by PIB Chennai

 

ஆதார் வைத்திருப்பவர்கள் 2023 ஏப்ரல்  மாதத்தில் 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 19.3 சதவீதம் அதிகம். இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த அங்கீகாரப் பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அடுத்ததாக ஒரு முறை வழங்கும் கடவுச்சொற்கள், முக அங்கீகாரம் ஆகியவை உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் மக்களின் கோரிக்கையின் பேரில் 15.44 மில்லியனுக்கும் அதிகமான ஆதார்கள் புதுப்பிக்கப்பட்டன. 2023 ஏப்ரல் மாதத்தில், ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை, மைக்ரோ ஏடிஎம் நெட்வொர்க் மூலம் 200.6 மில்லியனுக்கும் அதிகமான வங்கி பரிவர்த்தனைகள் சாத்தியமாகின.

ஆதார் இ-கேஒய்சி சேவையானது வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிச் சேவைத் துறைகளில், வெளிப்படையான மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதிலும், வணிகம் செய்வதை எளிதாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 250.5 மில்லியன் இ-கேஒய்சி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2023 ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆதார் இ-கேஒய்சி பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14.95 பில்லியனைத் தாண்டியுள்ளது

******

SM/CR/KRS



(Release ID: 1926455) Visitor Counter : 171