வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2014 – 2022 காலகட்டத்தில் வடகிழக்குப் பகுதியின் மேம்பாட்டுக்காக 1350 திட்டங்களுக்கு ரூ.15,867.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Posted On: 13 MAR 2023 4:38PM by PIB Chennai

நாட்டின் வடகிழக்குப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை  அமைச்சகத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 4121 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது 7545 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1,05,518 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 17 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

2014ம் ஆண்டு முதல் தற்போது வரை வடகிழக்கு மாநிலங்களில் 864.7 கிலோமீட்டர் நீள ரயில் திட்டங்களுக்காக ரூ.19,855 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 20 ரயில்வே வழித்தடங்கள் மற்றும் இரட்டை ரயில் பாதைத் திட்டங்கள் 2011 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.74,485 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 321 கிலோ மீட்டர் நீளத்திற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் தொலைத்தொடர்பு வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1246 கிராமங்களுக்குத் தொலைத்தொடர்பு வசதி அளிக்கும் வகையில் 1358 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

இது தவிர வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு அமைச்சகமும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அமைச்சகத்தின் மூலம் 2014 – 2022 காலகட்டத்தில் வடகிழக்குப் பகுதியின் மேம்பாட்டுக்காக 1350 திட்டங்களுக்கு ரூ.15,867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

***

AP/PLM/SG/KPG

 


(Release ID: 1906510)