மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘திறன் மற்றும் கல்வி மூலம் இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் 2023, பிப்ரவரி 25 அன்று பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2023 8:59PM by PIB Chennai
‘திறன் மற்றும் கல்வி மூலம் இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் 2023, பிப்ரவரி 25 அன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.
இது, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளைத் திறம்பட செயல்படுத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையக் கருத்தரங்குகள் தொடரின் ஒரு பகுதியாகும். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஏழு முன்னுரிமைகளை மத்திய பட்ஜெட் கொண்டுள்ளது. அவை அமிர்தகாலத்தின் மூலம் நம்மை வழிநடத்தும் ‘சப்தரிஷியாக’ செயல்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். இது கல்வி மற்றும் திறனை உள்ளடக்கியதாகும்.
திறன், கல்வி ஆகிய இரு துறைகளையும் உள்ளடக்கிய ஆறு அமர்வுகள் இணையக் கருத்தரங்கில் இடம்பெறும். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் தவிர, மாநில அரசுகளின் கல்வி மற்றும் திறன் துறைகளைச் சேர்ந்தவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு அமைப்புகள், துறைசார்ந்த திறன் கவுன்சில்கள், ஐடிஐக்கள், ஃபிக்கி, சிஐஐ, நாஸ்காம் போன்ற அமைப்புகள் இந்த இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கான பரிந்துரைகள் வழங்கி பங்களிப்பு செய்வார்கள்.
இந்த அமர்வுகளின் கருப்பொருள்கள் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0, திறன் இந்தியா டிஜிட்டல் தளம் , திறன் இந்தியா சர்வதேச மையங்கள், தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆசிரியர் பயிற்சி.
இந்த நிகழ்வைக் காண கீழ்க்காணும் இணைய இணைப்பை சொடுக்கவும் : https://www.youtube.com/watch?v=k-Gh0Klm-1s
***
SRI / SMB / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1902328)
வருகையாளர் எண்ணிக்கை : 152