வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஜி-20 கூட்டமைப்பின் முதலாவது உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் புனேயில் 2023 ஜனவரி 16 மற்றும் 17-ல் நடைபெறுகிறது

Posted On: 14 JAN 2023 12:36PM by PIB Chennai

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஜி-20 கூட்டமைப்பின் முதலாவது உள்கட்டமைப்பு பணிக்குழுக்  கூட்டம் 2023 ஜனவரி 16 மற்றும் 17 தேதிகளில் புனேயில் நடைபெற உள்ளது. இந்தியாவால் அழைப்பு விடுக்கப்பட்ட உள்கட்டமைப்பு பணிக்குழு உறுப்பு நாடுகள், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளை இந்தக் கூட்டம் ஒன்றிணைத்து உள்கட்டமைப்பு செயல்திட்டம் குறித்து விவாதிக்கும். மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகியவை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளன. 

ஜி-20 உள்கட்டமைப்பு பணிக்குழுவானது உள்கட்டமைப்பு முதலீடுகளின் பல்வேறு அம்சங்களை ஆலோசிக்கும். உள்கட்டமைப்பை ஒரு சொத்துப் பிரிவாக உருவாக்குவது உட்பட, தரமான உள்கட்டமைப்பு முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான புதுமையான அம்சங்களை அடையாளம் காணுதல் போன்றவை இந்த உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இந்தியாவின் தலைமைத்துவத்தில் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற ஜி-20-ன் கருப்பொருள் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த உள்கட்டமைப்பு பணிக் குழுக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்த கருப்பொருள் சமமான வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மீட்சித் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான நகர்ப்புற உள்கட்டமைப்பைக் கட்டமைக்கும் நோக்கிலான விவாதங்கள் இந்த பணிக்குழுக் கூட்டத்தில் இடம்பெறும்.

இந்தக் கூட்டத்தில் முதன்மையான முன்னுரிமை அம்சமாக "நாளைய நகரங்களை உருவாக்க நிதி அளித்தல்: உள்ளடக்கிய, நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய மற்றும் நிலையான தன்மை கொண்ட நகரங்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும். நகரங்களை வளர்ச்சியின் மையங்களாக மாற்றுதல், நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கு நிதியளித்தல், எதிர்காலத்திற்கு ஏற்ற நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், ஆற்றல் திறனுள்ள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு தனியார் நிதிகளை ஈர்ப்பது மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைதல் போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த கருப்பொருள் கவனம் செலுத்தும்.

புனே கூட்டத்தின் ஒரு பகுதியாக "நாளைய நகரங்களுக்கு நிதியளித்தல்" என்ற உயர்மட்டப் பயிலரங்கமும் நடைபெறும். நாளைய நகரங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன் தேவைகள், தனியார் நிதியை அதிகரிப்பதில் முதலீட்டாளர்களின் பரிசீலனைகள் மற்றும் நாளைய நகரங்களின் நிதித் திறன் தேவைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய அம்சங்கள் இந்த பயிலரங்கத்தில் விவாதிக்கப்படும்.

ஜி-20 கூட்டத்திற்கு முன்னதாக புனே மாநகராட்சி மற்றும் பிற புனே நகர ஆர்வலர்களால் மக்கள் பங்களிப்புடன் கூடிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட ன.  இதில் ஜி-20 பற்றிய  விளக்கங்கள், 'நகரங்களை எதிர்காலத்துக்கு ஏற்ப தயார்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் முக்கியத்துவம்' என்ற கருத்தரங்கம், ஜி-20 சைக்ளத்தான் (சைக்கிள் போட்டி) ஆகியவை அடங்கும். தேசிய இளைஞர் தினத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி, தூய்மை இயக்கம் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாதிரி ஜி-20 விவாதங்கள் போன்றவையும் நடத்தப்பட்டன. ஜி 20 தொடர்பாக நடைபெறும் விவாதங்களில் அனைத்து தரப்பு மக்களையும் ஈடுபடுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின்போது, நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளுதல், எதிர்காலத்தில் நகரங்களில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நகரங்களை மேலும் சிறந்த தன்மையுடையவையாக மாற்றுதல் ஆகியவை தொடர்பாக ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதற்கு ஜி-20 உள்கட்டமைப்புப் பணிக்குழு ஒரு தளமாக பயன்படுத்தப்படும்.

மத்திய நிதி அமைச்சகம் ஜி-20 உள்கட்டமைப்பு செயல்திட்டங்களை வழிநடத்தி, புதிய யோசனைகளை உருவாக்கி, கூட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் செயல்படும்.

*****

 

SMB / PLM / DL



(Release ID: 1891251) Visitor Counter : 213