விவசாயத்துறை அமைச்சகம்

"விவசாய முதலீட்டு இணையதளத்தை" மத்திய வேளாண் அமைச்சர் திரு தோமர் தொடங்கி வைத்தார்

Posted On: 05 DEC 2022 6:19PM by PIB Chennai

மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் புதுதில்லியில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத்தலைவர் திருமிகு மெலிண்டா பிரெஞ்ச் கேட்சுடன் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பின் போது, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த  வேளாண் முதலீட்டு இணையதள உருவாக்கத்தை திரு தோமர் தொடங்கிவைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதில் அரசு முழுக்கவனம்  செலுத்தி வருவதாக திரு தோமர் கூறினார்.

பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு விவசாயத்துறை சந்திக்கும் பல சவால்களுக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்து அயராது பணியாற்றி வருவதாக தெரிவித்தார். நாட்டில் சிறு விவசாயிகள் அதிகமாக இருப்பதால் அவர்களது வலிமை அதிகரித்தால்தான் வேளாண்துறை முன்னேறி உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறிய அவர், இந்த திசையில் அரசு பயணிப்பதாக கூறினார்.  இந்தியாவில் பாரம்பரிய விவசாய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய திரு தோமர், தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு விவசாயத்துறையில் முதலீடுகள் அவசியமாகிறது என்று தெரிவித்தார். விவசாயத்துறையில் முதலீட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த பிரிவுகளுக்கான சிறப்பு தொகுப்பாக தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.  இதில் ரூ.1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதி ஆகும்.

மத்திய வேளாண் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக மெலிண்டா கேட்ஸ் கூறினார். பெண் விவசாயிகளை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இந்தியாவுடனான தமது அனுபவம் மிகச்சிறப்பானது என்று தெரிவித்தார். ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார்.

 (Release ID: 1880995)

**************

Sri/PKV/AG/RR



(Release ID: 1881122) Visitor Counter : 131


Read this release in: Telugu , English , Urdu , Marathi