பிரதமர் அலுவலகம்

தில்லியில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பிரதமரின் உரை

Posted On: 30 JUL 2022 12:18PM by PIB Chennai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு என்.வி. ரமணா அவர்களே, நீதிபதி திரு யு.யு. லலித் அவர்களே, நீதிபதி திரு டி.ஒய். சந்திரசூட் அவர்களே, சட்ட அமைச்சர் திரு கிரண் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, இணையமைச்சர் திரு எஸ்.பி. பாகேல் அவர்களே, உயர்நீதிமன்ற நீதிபதிகளே, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் கூட்டம் தேசிய அளவில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. இதைச் சிறப்பான துவக்கமாக நான் கருதுகிறேன். 

இன்னும்  சில நாட்களில் இந்தியா தனது 75-வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்யும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் தீர்மானங்களை நிறைவேற்றும் ‘அமிர்த காலம்’, இது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது, எளிதான வாழ்வு என்ற வகையில் நாட்டின் அமிர்த யாத்திரையில் எளிதான நீதியும் சம அளவு முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய சட்ட சேவைகள் ஆணையமும் அனைத்து மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களும் இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம். 

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் அரசியலமைப்பின் வல்லுநர்கள். அரசியலமைப்பின் 39ஏ பிரிவு சட்ட உதவிக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. நாட்டு மக்களின் நம்பிக்கையிலிருந்து அதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். மிகவும் நலிவடைந்த மக்களும் நீதியின் உரிமையை பெறுவதற்காக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடங்கப்பட்டது. எந்த சமுதாயத்திற்கும் நீதி அமைப்புமுறையை அணுகுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள், எனினும் நீதி, முறையாக வழங்கப்படுவதும் சம அளவு முக்கியம். நீதி உள்கட்டமைப்பும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த எட்டு ஆண்டுகளில் நீதி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 9000 கோடி செலவில் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப்படுகிறது. 

இந்த இரண்டு நாள் கருத்து பரிமாற்ற அமர்வு எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த நிகழ்வு என்பதால் சமமான முக்கிய முடிவுகளைத் தரும் என்று நான் நம்புகிறேன்.
மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*************



(Release ID: 1846727) Visitor Counter : 126