ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பணியிடங்களில் ரசாயனங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த கருத்தரங்கிற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்; சர்வதேச ரசாயன பாதுகாப்பு அட்டைகள் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2022 2:15PM by PIB Chennai
பணியிடங்களில் ரசாயனங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து இன்று புதுதில்லியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன துறையும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச ரசாயன பாதுகாப்பு அட்டைகளை ஏற்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன துறைக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையே டாக்டர் மாண்டவியா முன்னிலையில் கையெழுத்தானது.
தொழிலாளர் பாதுகாப்பும், மனிதாபிமான நடத்தையும் இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது என்று இந்த கருத்தரங்கில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். மக்களின் மேம்பாடு மற்றும் நலனை உறுதிசெய்ய உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்தியா மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். ரசாயன தொழில் துறை இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகவும் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடு காரணமாக ரசாயனங்கள் தொடர்பான விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இதுவே உலகளாவிய பாதுகாப்பு தரம் மற்றும் நடைமுறைகளை ஏற்பதற்கான தேவையை உருவாக்கியது என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள், நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோரின் சிந்தனை அமர்வை வலியுறுத்திய டாக்டர் மாண்டவியா இத்தகைய கலந்தாலோசனை புதிய சிந்தனைகளை கொண்டுவரும் என்றும், இது எதிர்காலத்தில் சட்டங்கள் இயற்றவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பயன்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1845306
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1845375)
வருகையாளர் எண்ணிக்கை : 228