குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமாக காவல் படை இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 08 MAY 2022 1:34PM by PIB Chennai

முற்போக்கான, நவீன இந்தியாவில் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு போலீஸ் படை இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். 

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு. பிரகாஷ் சிங் எழுதிய “இந்தியாவில் காவல்துறை சீர்திருத்தங்களுக்கான போராட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு.நாயுடு, சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் குற்றங்களைத் திறம்படச் சமாளிக்க நமது காவல்துறையினரின் திறமையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

காவல் துறையில் அதிக அளவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் நவீன கால காவல் துறைத் தேவைகளுக்கு ஏற்ப காவல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உட்பட போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களை அவர் எடுத்துரைத்தார்.

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும் நட்புடனும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், இந்த விஷயத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகளை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

காவல் துறை சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானது எனவும், பல ஆண்டுகளாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தேவையான அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறினார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களில் சீர்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற  விருப்பத்தை அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் காவல்துறை சீர்திருத்தங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். "அமைதியே முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இந்திய காவல்துறையின் வரலாற்றை நினைவு கூர்ந்த குடியரசு துணைத் தலைவர் 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் முக்கிய நோக்கத்துடன் காவல்துறையை உருவாக்கினர் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் போது, காவல்துறையை மக்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தினார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு, காவல்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. துரதிருஷ்டவசமாக, இந்த முக்கியமான பகுதியில் நாம் பின்தங்கிவிட்டோம், என்றும் அவர் கூறினார்.

எமர்ஜென்சியின் போது காவல் துறையை தவறாகப் பயன்படுத்திய நிகழ்வுகளைக் குறிப்பிட்ட திரு. நாயுடு, மனித உரிமைகளை நசுக்குவதற்கும், ஆளும் கட்சியின் அனைத்து அரசியல் எதிரிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை சிறையில் அடைப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது என்றார்.

அதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் ஒரு தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. அது காவல்துறை சீர்திருத்தங்களுக்கான விரிவான பல  முன்மொழிவுகளுடன் அறிக்கைகளை சமர்ப்பித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சக்திகளின் அனைத்து சாயல்களையும் எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களை நினைவு கூர்ந்து திரு. நாயுடு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் எல்லை பாதுகாப்புபடை முன்னாள் இயக்குனர் திரு. பிரகாஷ் சிங், முன்னாள் தலைமை இயக்குநர் , இந்தியா டுடே நிர்வாக ஆசிரியர் திரு. கௌசிக் டேகா, இந்திய போலீஸ் அறக்கட்டளை தலைவர் திரு. என். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பில் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1823631

*********



(Release ID: 1823646) Visitor Counter : 269