பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, போலந்து அதிபர் திரு ஆன்ட்ரஸெஜ் துடா ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2022 10:57PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று போலந்து அதிபர் திரு ஆன்ட்ரஸெஜ் துடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

உக்ரைனிலுள்ள இந்தியர்கள் இடம் பெயர்ந்து வரும்போது அவர்களுக்கு விசா தளர்வுகள் அளித்து, அவர்கள் இந்தியா திரும்ப உதவியதற்காக போலந்து அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த கடினமான சூழ்நிலையில் போலந்து மக்கள் இந்தியர்களிடம் காட்டிய அன்புக்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.

2001-ம் ஆண்டு குஜராத் பூகம்பத்தின்போது போலந்து அளித்த உதவியை நினைவு கூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் பாரம்பரிய நட்புறவை சுட்டிக்காட்டினார்.

உக்ரைனிலிருந்து, போலந்து வந்த இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் ஜென்ரல் வி.கே. சிங்கை போலந்துக்கு தமது சிறப்புத் தூதராக அனுப்பி வைத்துள்ளதை போலந்து அதிபரிடம் தெரிவித்தார்.

உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறையை கைவிட்டு, போர் நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென்ற இந்தியாவின் தொடர் வேண்டுகோளையும் பிரதமர் வெளியிட்டார்.  நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு கொடுத்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1802331) வருகையாளர் எண்ணிக்கை : 230