நிதி அமைச்சகம்

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்திற்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்

Posted On: 22 FEB 2022 6:13PM by PIB Chennai

மும்பையில் இன்று நடைபெற்ற வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான பட்ஜெட்டுக்குப்  பிந்தைய கூட்டத்திற்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.

மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிருஷ்ணராவ் காரத், நிதிச்  சேவைகள் துறையின் செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா, பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் திரு அஜய் சேத், தலைமைப்  பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி அனந்த நாகேஸ்வரன், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைவர்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தகவல் பரிமாற்றம் மற்றும் இணைந்து செயல்படுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நிதி அமைச்சர், சிறிய அளவில் கடன் பெறுவோருக்குக்  கடன் கிடைத்தலை எளிதாக்குவதற்கும் டிஜிட்டல் கடன் வழங்கலை ஊக்குவிப்பதற்கு கணக்கு அக்ரிகேட்டர்  அமைப்பில் இணையுமாறு அனைத்து வங்கிகளையும் கேட்டுக்கொண்டார். வட கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக்  கடன் வழங்கும் முறையைப்  பின்பற்றுமாறும் அவர்  கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் கதி சக்தி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, அவசர காலக்  கடன் உத்திரவாத திட்டம், புதிய நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

செலவுகளைக்  குறைப்பதற்கும், சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் டிஜிட்டல் வங்கியியல், டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதித்  தொழில்நுட்பப்  புதுமைகள் ஆகியவை நல்லதொரு வாய்ப்பு என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800334

                                *********************



(Release ID: 1800391) Visitor Counter : 359