நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கச்சா பாமாயிலுக்கான விவசாய வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2022 5:53PM by PIB Chennai
நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் நோக்கிலும், உலகளவில் சமையல் எண்ணெய்களின் விலைகள் அதிகரித்து வருவதால், உள்நாட்டு சமையல் எண்ணெய்களின் விலைகள் மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், கச்சா பாமாயிலுக்கான விவசாய வரியை பிப்ரவரி 12, 2022 முதல் 7.5%-லிருந்து 5% ஆக இந்திய அரசு குறைத்துள்ளது.
விவசாய வரி குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இடையேயான இறக்குமதி வரி இடைவெளி 8.25% ஆக அதிகரித்துள்ளது. கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பு, சுத்திகரிப்புக்காக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய உள்நாட்டு சுத்திகரிப்புத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும்.
சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைக்க அரசு எடுத்த மற்றொரு முன்கூட்டிய நடவடிக்கை, கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான தற்போதைய அடிப்படை இறக்குமதி வரியான பூஜ்ஜிய சதவீதத்தை செப்டம்பர் 30, 2022 வரை நீட்டிப்பது ஆகும்.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி 12.5% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 17.5% ஆகவும் 2022 செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அதிகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும்.
நுகர்வோருக்கு நன்மைகளை வழங்குவதில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய எண்ணெய் தொழில்துறையினர் கூட்டத்தை மத்திய அரசு நாளை நடத்துகிறது. மேலும், சரக்கு வரம்பு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798318
****************
(வெளியீட்டு அடையாள எண்: 1798341)
வருகையாளர் எண்ணிக்கை : 327