வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

1,700 கோடி ரூபாய் செலவில் இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர்வதற்கு ஒப்புதல்

Posted On: 05 FEB 2022 6:30PM by PIB Chennai

இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை (IFLDP)  2021-22ம் ஆண்டிலிருந்து 1,700  கோடி ரூபாய் செலவில் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐஎஃப்எல்டிபி திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அல்லது மேலும் மறுஆய்வு செய்யும் வரை, இதில் எது முன்போ அதுவரை இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

தோல் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தோல் துறையில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கூடுதல் முதலீடுகளுக்கு வழி ஏற்படுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் உற்பத்தியை  அதிகரிப்பது போன்றவற்றை இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டு திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

1. 2021-26ம் ஆண்டில் ஐஎஃப்எல்டிபி திட்டத்தின் கீழ் கீழ்கண்ட துணை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது :

(i) நிலையான தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி( ரூ.500 கோடி மதிப்பீட்டில்): - வடகிழக்கு பகுதிகளில் ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு ஆலையும் அமைக்கும் துணை நிறுவனத்துக்கும் மொத்த திட்ட செலவில் 80 சதவீதம் அளிக்கப்படும். 20 சதவீதத்தை தொழில் நிறுவனங்கள் ஏற்க வேண்டும். மற்ற பகுதிகளில் 70 சதவீத நிதியுதவி அளிக்கப்படும். 30 சதவீதத்தை தொழில் நிறுவனங்கள் ஏற்க வேண்டும். இதற்கான திட்ட செலவின் வரம்பு ரூ.200 கோடியாக இருக்க வேண்டும்.

(ii) ஒருங்கிணைந்த தோல்துறை மேம்பாடு துணை திட்டம் ( திட்ட செலவு ரூ.500 கோடி): தொழில் நிறுவனங்களின் நவீனமயமாக்கம், விரிவாக்கம் மற்றும்  மேம்பாட்டுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 30 சதவீத உதவித் தொகையும், இதர நிறுவனங்களுக்கு 20 சதவீத உதவித் தொகையும் வழங்கப்படும். அதிகபட்ச உதவியாக ரூ.15 கோடி வரை வழங்கப்படும்.

(iii) நிறுவன வசதிகள் அமைத்தல் ( திட்ட செலவு ரூ.200 கோடி): சர்வதேச பரிசோதனை மையம், விளையாட்டு வளாகம், எல்இடி விளக்குகள் பொருத்துதல், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தில் பெண்கள் விடுதிகள் கட்டுதல் போன்றவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

(iv) மெகா தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு மேம்பாடு (MLFACD) துணைதிட்டம் ( திட்ட செலவு ரூ.300  கோடி): தோல் மற்றும் காலணி தொழில் தேவைகளுக்கு சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு அமைப்பதை துணை திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

(v) தோல் மற்றும் காலணி துறையில் இந்திய பிராண்டுகளை ஊக்குவித்தல் ( திட்ட செலவு ரூ.100 கோடி): - திட்ட மொத்த செலவில் மத்திய அரசு 50 சதவீதம் அளிக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான வரம்பு ஒவ்வொரு பிராண்டுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.10 கோடி. இதன் மூலம் 3 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் 10 இந்திய பிராண்டுகள் ஊக்குவிக்கப்படும்.

(vi) டிசைன் ஸ்டுடியோக்கள் மேம்பாடு ( திட்ட செலவு ரூ.100 கோடி):- இது புதிய துணை திட்டம். 10 இந்திய ஸ்டுடியோக்களை மேம்படுத்த உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஸ்டுடியோக்கள் மார்க்கெட்டிங் / ஏற்றுமதி தொடர்புகளை ஊக்குவிக்கும்.

2017-18ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டு வரை மனிதவள மேம்பாட்டு துணை திட்டம்,  திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 3.24,722 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் 2,60,880 பயிற்சியாளர்களுக்கு தோல் மற்றும் காலணி துறையில் வேலைகள் வழங்கப்பட்டன.   கடந்த 2019-20ம்ஆண்டில், 12,947 தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 2020-21ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று காரணமாக எந்த பயிற்சியும் அளிக்க இயலவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

 https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1795797

*************



(Release ID: 1795826) Visitor Counter : 262