மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்திற்கு, மத்திய பட்ஜெட் 2022-23 முக்கியத்துவம் அளிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
02 FEB 2022 6:07PM by PIB Chennai
மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்துக்கு, மத்திய பட்ஜெட்டில் ரூ.6,407.31 கோடி நிதியை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஒதுக்கியுள்ளார். இத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் திரு அதுல் சதுர்வேதி கூறுகையில், பட்ஜெட்டில் கால்நடை வளர்ப்புக்கு 40 சதவீதமும், மத்திய திட்டங்களுக்கு 48 சதவீதமும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். இது கால்நடை மற்றும் பால் விவசாயிகள் வளர்ச்சிக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு குறைக்கப்பட்ட குறைந்தபட்ச வரி, மேல்வரி குறைப்பு போன்றவை நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பயன் அளிக்கும் என திரு அதுல் சதுர்வேதி சுட்டிக் காட்டினார். இது நாட்டில் உள்ள 8 கோடி பால் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை வழங்கும் எனவும் அவர் கூறினார்.
தேசிய கோகுல் திட்டம் மற்றும் பால் வளர்ச்சிக்கான தேசிய திட்டம் ஆகியவற்றுக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது, உள்நாட்டு கால்நடை எண்ணிக்கையையும், தரமான பால் உற்பத்தியையும் அதிகரித்து 8 கோடி பால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
ஒரே சுகாதார திட்டம் அமலாக்கம், கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட சுமார் 60 சதவீதம் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான கால்நடைகளையும், ஆரோக்கியமான இந்தியாவையும் உறுதி செய்யும் என திரு அதுல் சதுர்வேதி வலியுறுத்தி கூறினார்.
************************
(வெளியீட்டு அடையாள எண்: 1794880)
வருகையாளர் எண்ணிக்கை : 310