பிரதமர் அலுவலகம்
பிரயாக்ராஜுக்குப் பயணம் செய்த பிரதமர் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்
சுமார் 16 லட்சம் பெண் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியைப் பிரதமர் பரிவர்த்தனை செய்தார்
தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்களுக்கான முதல் மாத உதவித் தொகையைப் பரிவர்த்தனை செய்த பிரதமர், 1 லட்சத்திற்கும் அதிகமான முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டப் பயனாளிகளுக்குப் பணப்பரிவர்த்தனைகளையும் செய்தார்
200-க்கும் அதிகமான ஊட்டச்சத்து தயாரிக்கும் துணை அமைப்புகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
“முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஊரக ஏழைகளுக்கும், இளம்பெண்களுக்கும் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்”
“உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசால் பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, கௌரவம், மதிப்பு ஆகியவை முன்னெப்போதும் காணப்படாதவை. முந்தைய சூழ்நிலைகள் திரும்புவதை அனுமதிப்பதில்லையென்று உத்தரப்பிரதேசப் பெண்கள் முடிவு செய்துள்ளனர்”
“தற்சார்பு இந்தியா இயக்கத்தின் சாம்பியன்களாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சகோதரிகளை நான் கருதுகிறேன்”
“தங்களின் படிப்பைத் தொடர்வதற்கும், சமமான வாய்ப்புகள் பெறுவதற
Posted On:
21 DEC 2021 3:08PM by PIB Chennai
பிரயாக்ராஜுக்குப் பயணம் செய்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகளிருக்கு குறிப்பாக அடித்தள நிலையில் உள்ள மகளிருக்கு அதிகாரமளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுயஉதவிக் குழுக்களின் சுமார் 16 லட்சம் பெண் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் சுயஉதவி குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 கோடியைப் பிரதமர் பரிமாற்றம் செய்தார். ஒவ்வொரு சுயஉதவி குழுவும் ரூ.1.10 லட்சம் என 80,000 சுயஉதவிக் குழுக்கள் சமூக முதலீட்டு நிதியையும், ஒவ்வொரு சுயஉதவி குழுவும் ரூ.15,000 என 60,000 சுயஉதவிக் குழுக்கள் சுழற்சி நிதியையும் பெற்றன. தீன்தயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தப் பரிமாற்றம் செய்யப்பட்டது, தோழிகள் எனப்படும் வணிகத் தொடர்பாளர்கள் 20,000 பேரின் வங்கிக் கணக்கில் முதல் மாத உதவித் தொகையான ரூ.4,000 பிரதமரால் பரிமாற்றம் செய்யப்பட்டதை இந்த நிகழ்ச்சியில் காண முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போது 1 லட்சத்திற்கும் அதிகமான முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.20 கோடியையும் பிரதமர் பணப்பரிவர்த்தனை செய்தார். 202 ஊட்டச்சத்து தயாரிக்கும் துணை அமைப்புகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தி இலக்கிய கர்த்தா ஆச்சாரிய மகாவீர் பிரசாத் துவிவேதியின் நினைவுத் தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார். பிரயாக்ராஜ் என்பது கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் நிலம் என்றும், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அன்னை சக்தியின் அடையாளம் என்றும் அவர் கூறினார். இந்தப் புனித நகர் என்று பிரம்மாண்டமாக பெண்கள் சக்தியின் சங்கமத்தைக் காண்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் மகளிருக்கு அதிகாரமளிக்கும் பணிகளை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் கூறினார். இம்மாநிலத்தின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளி இளம்பெண்களின் கணக்குகளுக்கு பல கோடி ரூபாயை அவர் பரிமாற்றம் செய்த, முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஊரக ஏழைகளுக்கும், இளம்பெண்களுக்கும் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசால் பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, கௌரவம், மதிப்பு ஆகியவை முன்னெப்போதும் காணப்படாதவை. முந்தைய சூழ்நிலைகள் திரும்புவதை அனுமதிப்பதில்லையென்று உத்தரப்பிரதேசப் பெண்கள் முடிவு செய்துள்ளனர். பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் இயக்கத்தின் மூலம் பாலினத்தை அறிந்து கருச்சிதைவு செய்வதைத் தடுப்பதற்கு சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப அரசு முயற்சி செய்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இதன் விளைவாக பல மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார். கருவுற்றப் பெண்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனூட்டுதல், மருத்துவமனைகளில் மகப்பேறு, கருவுற்ற காலத்தில் ஊட்டச்சத்து ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் கருவுற்ற காலத்தில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் முறையான உணவால் அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள முடியும்.
பெண்களின் கௌரவத்தை அதிகரிக்க வகைசெய்யும் பல நடவடிக்கைகளைப் பிரதமர் பட்டியலிட்டார். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டியது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு வசதி, வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீர் வசதி ஆகியவற்றுடன் சகோதரிகளின் வாழ்க்கையில் புதிய வசதியும் வருகிறது என்று பிரதமர் கூறினார்.
பல பத்தாண்டுகளாக வீடும், சொத்துக்களும் ஆண்களின் உரிமை மட்டும் என்று கருதப்பட்டு வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அரசின் திட்டங்கள் இந்த சமத்துவமின்மையை நீக்கியிருப்பதாக அவர் கூறினார். இதற்குப் பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் மிகப் பெரிய உதாரணமாகும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் பெண்களின் பெயரிலேயே கட்டப்படுகின்றன.
வேலைவாய்ப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களிலும், குடும்பத்தில் வருவாய் அதிகரிப்பிலும் பெண்கள் சமபங்காளிகளாக இருப்பதாகப் பிரதமர் கூறினார். இன்று, முத்ரா திட்டம் புதிய பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட இதில் பயன்பெறுகிறார்கள். தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊரக அமைப்புகளிலும் பெண்கள் இணைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். “தற்சார்பு இந்தியா இயக்கத்தின் சாம்பியன்களாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சகோதரிகளை நான் கருதுகிறேன். இந்த சுயஉதவிக் குழுக்கள் உண்மையில் தேசிய உதவிக் குழுக்களாகும்” என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.
இரட்டை என்ஜின் அரசு பாகுபாடு ஏதுமில்லாமல் மகள்கள் எதிர்காலத்திற்கு அதிகாரமளித்த ஓய்வின்றி பாடுபடுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பெண்களின் திருமணத்திற்கு சட்டப்படியான வயது தொடர்பான முக்கிய முடிவு பற்றியும் அவர் தெரிவித்தார். “ஏற்கனவே ஆண்களின் திருமணத்திற்கு சட்டப்படியான வயது 21 ஆக இருந்தது. ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் 18 வயது என இருந்தது. தங்களின் படிப்பைத் தொடர்வதற்கும், சமமான வாய்ப்புகள் பெறுவதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று இளம்பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இளம்பெண்களுக்கு திருமணத்தின் சட்டப்படியான வயதை 21 ஆகக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்யப்படுகின்றன. பெண்களின் நலன் கருதி நாடு இந்த முடிவை எடுத்திருக்கிறது” என்று திரு.மோடி கூறினார்.
சமீப ஆண்டுகளில் இம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மேம்பட்டிருப்பதைப் பிரதமர் குறிப்பிட்டார். குற்றவாளிகள் ராஜ்ஜியம் மற்றும் சட்டம் செயல்படாத நிலை ஒழிப்பில் மிகப் பெரிய பயனாளிகள் உத்தரப்பிரதேசத்தின் சகோதரிகளும் மகள்களும்தான் என்று அவர் கூறினார். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத்தை அவர் பாராட்டினார்.
“உத்தரப்பிரதேசத்தில் இப்போது பாதுகாப்பும், உரிமைகளும் இருக்கின்றன. உத்தரப்பிரதேசம் இன்று வாய்ப்புகளையும், வணிகத்தையும் கொண்டிருக்கிறது. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்த்துகள் இருப்பதால் இந்தப் புதிய உத்தரப்பிரதேசத்தை எவராலும் இருட்டுக்குள் தள்ள முடியாது என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என்று பிரதமர் கூறினார்.
*****
(Release ID: 1783903)
Visitor Counter : 227
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam