சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்) 5-ன் இரண்டாம் கட்ட முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது


தமிழ்நாடு, புதுச்சேரியில் மருத்துவமனையில் மகப்பேறு 100 சதவீதமாக உள்ளது

Posted On: 24 NOV 2021 1:50PM by PIB Chennai

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்) 5-ன் இரண்டாம் கட்ட முடிவுகளை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் குமார் பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் ஆகியோர் புதுதில்லியில் இன்று 2019-21-ன் மக்கள் தொகை, மகப்பேறு, சிறார் சுகாதாரம், குடும்ப நலன், ஊட்டச்சத்து மற்றும் பிறவற்றுக்கான இந்தியா, இரண்டாம் கட்டத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான முக்கிய குறியீடுகளின் தகவல் அறிக்கையை வெளியிட்டனர்.

இரண்டாம் கட்ட ஆய்வுக்கு அருணாச்சலப்பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், தில்லி தேசிய தலைநகர் பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தியா மற்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் இரண்டாம் கட்டத்திற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முக்கிய முடிவுகளில் சில:

தேசிய அளவில் மொத்த கருத்தரித்தல் விகிதங்களில் ஒரு பெண்ணுக்கான குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை மேலும் குறைந்து 2.2-லிருந்து 2.0 ஆகி இருக்கிறது. 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது சண்டிகரின் 1.4 என்பதிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் 2.4 வரை உள்ளது.

அகில இந்திய அளவில் 12-23 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இயக்கம் 62 சதவீதத்திலிருந்து 76 சதவீதம் என மேம்பட்டுள்ளது. இதே வயது பிரிவினரில் முழுமையான தடுப்பூசி இயக்கம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11-ல் 4-ல் 3 பங்குக்கும் அதிகமாக உள்ளது. அதிகபட்ச விகிதத்தில் ஒடிசா இருக்கிறது. (90%)

அகில இந்திய அளவில் மருத்துவமனையில் மகப்பேறு விகிதம் கணிசமாக 79 சதவீதத்திலிருந்து 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இது 100 சதவீதமாக உள்ளது. இரண்டாம் கட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7-ல் இந்த விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

அகில இந்திய அளவில் 6 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தல் 2015-16-ல் 55 சதவீதம் என்பதிலிருந்து 2019-21-ல் 64 சதவீதமாக மேம்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளது.

*****



(Release ID: 1774695) Visitor Counter : 2467