வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மணிப்பூர் மாநிலத்தின் மேலதிக வளர்ச்சிக்கு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2021 11:03AM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மணிப்பூர் மாநிலத்தின் மேலதிக வளர்ச்சிக்கு, அம்மாநில தொழில் நிறுவனங்களுக்கு உறுதியளித்தார்.
இம்பாலில் சனிக்கிழமை இரவு தொழில், வர்த்தகத்துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், இந்தியாவின் வளர்ச்சி, மணிப்பூரின் வளர்ச்சி இல்லாமல் முழுமையடையாது என்றார். தொழில், வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தத் தொலைதூர மாநிலத்தின் பெரிய சவால்கள் குறித்து மத்திய அரசு அறிந்துள்ளதாக அவர் கூறினார்.
வடகிழக்கு தொழில் மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த மேம்பாட்டு தொழில்திட்டங்களுக்கு அனுமதி உள்பட பிராந்தியத்தில் தொழில், வர்த்தகம் வளர்ச்சியடைய சிறப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு முன்முயற்சி எடுத்துள்ளதுடன், மேலும் பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். எனினும், தொழில், வர்த்தகம் ஆகியவை இந்தப்பிராந்தியத்தில் வளர்ச்சியடைய, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து, வளர்ச்சிக்கு வழிகாண உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொரு விஷயத்துக்கும் தில்லியையோ, கொல்கத்தாவையோ நாடி வராமல், தங்களது சொந்த அடையாளத்துடன் தங்கள் நலனைக்காத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தமது அமைச்சகம், அனைத்தையும் ஆன்லைனில் கொண்டு வந்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். மியான்மர் மற்றும் ஆசியான் நாடுகளின் நுழைவு வாயிலாக மணிப்பூர் மாநிலம் திகழ்வதால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்கள் மாநிலத்துக்கு கிடைக்கச் செய்ய அமைச்சகம் தேவையான இயன்ற அனைத்தையும் செய்யும் என மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773660
****
(வெளியீட்டு அடையாள எண்: 1773735)
வருகையாளர் எண்ணிக்கை : 262