குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளை மக்கள் வாங்கி ஊக்குவிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 06 OCT 2021 6:56PM by PIB Chennai

வெளிநாட்டு பொருட்களுக்குப் பதில், இந்திய கைவினைப் பொருட்கள், கைத்தறிகள், காதி மற்றும் இதர பொருட்களை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு  துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மூங்கில்  பாட்டில்கள், கைப்பைகள், செயற்கை மலர்கள், அகர்பத்திகள், சால்வைகள், பட்டு தயாரிப்புகள், நறுமண எண்ணெய் ஆகியவை திரு. வெங்கையா நாயுடுவை மிகவும் கவர்ந்தன.

இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

உள்ளூர் தயாரிப்புகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கைவினை கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் திறமை பாராட்டுக்குரியது. அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இந்தியர்கள் இடையே அபார திறமை மற்றும் அறிவு உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் 35 வயதுக்கு கீழும், 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு கீழும் உள்ளனர். இப்போதைய தேவை, திறமைகள் அடையாளம் காணப்பட்டு, கைவினை கலைஞர்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் கைவினை கலைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, சரியான நேரத்தில் கடன் வழங்கி, அவர்கள் வருவாய் ஈட்டி சொந்த காலில் நிற்க உதவ வேண்டும்.

இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மாநில அரசு மற்றும் வடகிழக்கு கவுன்சிலை திரு வெங்கையா நாயுடு பாராட்டினார். திரிபுரா முதல்வர் திரு பி்ப்லப் குமார் தேப் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761515



(Release ID: 1761544) Visitor Counter : 204