சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை பரப்ப, ரேடியோ நிலையங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் : மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது

Posted On: 24 SEP 2021 7:37PM by PIB Chennai

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள், தனியார் எப்.எம் சேனல்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 150 ரேடியோ நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு லாவ் அகர்வால் முக்கிய உரையாற்றினார். பொது நலத் தகவல்களை வெளியிடுவதன் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும்தொற்று இன்னும் உள்ளதால், இது மற்றொரு அலைக்கு வழிவகுக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்தார். 100 கோடி தடுப்பூசி இலக்கை நாடு விரைவில் அடையவுள்ளதாகவும், இந்த கடின உழைப்பின் மூலம் பெற்ற வெற்றி, சோர்வு காரணமாக கை நழுவி விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.  கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த பொது நலன் தகவலை, மக்களிடம் பரப்ப வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மத்திய சுகாதாரத்து துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் யுனிசெப் அமைப்பின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757815

*****************

 



(Release ID: 1757861) Visitor Counter : 198