பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படை தளபதியின் பெங்களூரு பயணம்

Posted On: 25 AUG 2021 9:16AM by PIB Chennai

இந்திய விமானப் படையின்  தளபதி ஆர் கே எஸ் பதௌரியா, பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படை தளங்களையும், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான சோதனை மையங்களை ஆகஸ்ட் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் பார்வையிட்டார்.

விமான அமைப்புமுறைகளின் சோதனை மையத்தின் தளபதி ஏவிஎம் ஜிதேந்திரா மிஸ்ரா, விமானப்படை தளபதிக்கு வரவேற்பளித்தார்.

மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சி நிலை குறித்து விமானப்படை தளபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த மையத்தின் தனித்துவம் வாய்ந்த மற்றும் சவாலான பங்களிப்பைக் குறிப்பிட்டுப் பேசிய  தளபதி ஆர் கே எஸ் பதௌரியா, இந்திய விமானப்படையின் இயக்க பிரிவுகளின் தேவையை நிறைவேற்றுவதற்கான தனது பணியை மையம் திறம்பட தொடர்ந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

விமானம் சார்ந்த மென்பொருள் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வரும் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்திற்குச் சென்ற விமானப்படை தளபதி, சவால்மிக்க திட்டங்களில் நிலையான கவனத்தை செலுத்தி இந்திய விமானப்படையின் இயக்கம் மற்றும் செயல் திறனை அதிகரிக்க இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்திய விமானப்படை விமானங்களில் உள்ள பல்வேறு ஆயுதங்களை ஒன்றிணைப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மென்பொருளை உருவாக்கி தற்சார்பு இலக்கை அடைவதை நோக்கி முன்னேற வேண்டும் என்ற தமது தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்தார்.

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமை, டிஆர்டிஓ மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் குழுவினருடன் கலந்துரையாடிய விமானப்படை தளபதி ஆர் கே எஸ் பதௌரியா, எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்வதற்காக  உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் வகையில் விமானத் துறையை கட்டமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748729

 

-----



(Release ID: 1748982) Visitor Counter : 170