சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நாக்பூர் மகா மெட்ரோவின் புதிய பிரிவு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

Posted On: 20 AUG 2021 5:00PM by PIB Chennai

நாக்பூரில் மகா மெட்ரோவால் நிறுவப்பட்டுள்ள சீதாபார்தி - ஜீரோ மைல் - கஸ்தூர்சந்த் பூங்கா வழித்தடமும், சுதந்திர பூங்காவும் நாக்பூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.

நாக்பூர் மகா மெட்ரோவின் 1.6 கிலோமீட்டர் நீள சீதாபார்தி - ஜீரோ மைல் - கஸ்தூர்சந்த் பூங்கா வழித்தட திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு நாக்பூரில் அதிகளவில் உருவாக்கப்படுகிறது. நமது நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை அடுக்கு மெட்ரோ இங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மகாராஷ்டிரா முதல்வர் திரு உத்தவ் தாக்கரே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி ஆகியோர் ஜீரோ மைல் பாயிண்ட்டில் மெட்ரோ வழித்தடத்தை துவக்கி வைத்தனர். இந்த வழித்தடத்தில் முதல் மெட்ரோ ரயிலை காணொலி மூலம் முதலமைச்சரும் மத்திய அமைச்சர்களும் தொடங்கி வைத்தனர்.

காட்டன் மார்க்கெட்டில் இருந்து ஜீரோ மைல் நிலையத்திற்கு போக்குவரத்து சிக்னல்களின் இடையூறு இல்லாமல் செல்வதற்கான சுரங்கப்பாதை ஒன்றை அமைப்பதற்கு மத்திய சாலைகள் நிதியிலிருந்து நிதி உதவி அளிக்கப்படும் என்று திரு நிதின் கட்கரி உறுதி அளித்தார்.

நாக்பூரில் உள்ள தெலங்கெடி ஏரி மற்றும் பாலத்தை அழகுபடுத்த மகா மெட்ரோ பெரிய அளவில் உதவியுள்ளதாக அவர் கூறினார். மெட்ரோ இரண்டாவது கட்டத்திற்கான முன்மொழிதல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மும்பை-தானே நகரங்களின் மேம்பாட்டிற்காக கூடுதலாக  ஒரு லட்சம் கோடி வழங்கப்படும் என்றும் திரு கட்கரி உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747616

*****************



(Release ID: 1747693) Visitor Counter : 214