ரெயில்வே அமைச்சகம்

தேஜஸ் ரயில் பெட்டிகளுடன் மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இயக்கம்

Posted On: 19 JUL 2021 5:39PM by PIB Chennai

மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், மேம்படுத்தப்பட்ட சொகுசான தேஜஸ் ரயில் பெட்டிகளை மேற்கு ரயில்வே இன்று அறிமுகம் செய்தது.

மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள இந்த பிரகாசமான பொன் நிறத்திலான  ரயில் பெட்டிகளில், நவீன அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். தேஜஸ் ரயில் பெட்டிகள் முதல் முறையாக இன்று தனது பயணத்தை தொடங்கின.

இது குறித்து மேற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி திரு சுமித் தாகூர் கூறுகையில், ‘‘தேஜஸ் ரயில்பெட்டி பயன்பாட்டின் மூலம், தடுப்பு பராமரிப்புக்கு பதிலாக, முன்கணிப்பு பராமரிப்பை  நோக்கி செல்ல இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நீண்ட தூர பயணத்துக்கு, படுக்கை வசதியுடன் கூடிய தேஜஸ் ரயில்பெட்டிகள் அறிமுகம், ரயில்வேயின் மேம்படுத்தப்பட்ட பயண அனுபவத்தில் மற்றொரு முன்னுதாரண மாற்றம்’’ என்றார்.

நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் பெட்டிகள், நீண்டதூர ரயில்களில் பயன்படுத்தப்படும் ரயில்பெட்டிகளை படிப்படியாக மாற்றும்.

இந்த நவீன பெட்டிகள் பயணிகளுக்கு, உலகத் தரத்திலான வசதிகளை அளிக்கும்.  ஜிஎஸ்எம் நெட்வொர்க் இணைப்பு மூலம், இந்த ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு தேவையான தகவல்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் கணினி தகவல்களை தெரிவிக்கும் (PICCU)  வசதி உள்ளது. சிசிடிவி கேமிரா பதிவு, கழிவறையில் துர்நாற்றத்தை தெரிவிக்கும் சென்சார், அபாய பொத்தான், தீ எச்சரிக்கை கருவி, காற்றின் தரத்தை தெரிவிக்கும் கருவி உட்பட ஏராளமான நவீன வசதிகள் இந்த ரயில் பெட்டிகளில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736849

*****************



(Release ID: 1736965) Visitor Counter : 231