தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் சட்டங்கள் மற்றும் குறியீடுகளின் அமலாக்கம் பற்றி ஸ்ரீநகரில் இந்திய தொழிலாளர் தலைமை ஆணையர் ஆய்வு

Posted On: 18 JUL 2021 1:13PM by PIB Chennai

ஸ்ரீநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் குறியீடுகள் பின்பற்றப்படுவதன் நிலை குறித்து இந்திய தொழிலாளர் தலைமை ஆணையர் திரு டி பி எஸ் நெகி இன்று ஆய்வு செய்தார். மாநில அரசு மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையகம், எரிசக்தி தொகுப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூத்த திட்ட அதிகாரிகளுடன் தங்களது திட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் நேரிடும் தொழிலாளர் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து திரு நெகி கேட்டறிந்தார். அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

மாநில அரசின் உயர் அதிகாரிகளும், திட்டங்களின் பொது மேலாளர்களும் தொழிலாளர் சட்டங்களின் அமலாக்கம் குறித்து விளக்கினார்கள். தொழிலாளர் சட்டங்களுக்கு இணக்கமாக அவர்களது திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு திரு நெகி திருப்தி தெரிவித்தார். தொழிலாளர் சட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் குறியீடுகளை முறையாக அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். புதிய தொழிலாளர் குறியீடுகளுக்கு இணங்குவதால் அரசு, ஊழியர்கள் மற்றும் பணியிலமர்த்துபவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதை அவர் விளக்கினார். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கார்கில் மற்றும் லேவில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக, திரு நெகி, ஜூலை 19 மற்றும் 20-ஆம் தேதி அந்தப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736531

 

-----



(Release ID: 1736572) Visitor Counter : 252


Read this release in: English , Urdu , Hindi , Bengali