பாதுகாப்பு அமைச்சகம்

சண்டிநகரில் உள்ள விமானப்படை நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு

Posted On: 17 JUL 2021 4:38PM by PIB Chennai

விமானப்படை சிறப்பு படை வீரர்கள் (கருட்) 69 பேர் பயிற்சியை

வெற்றிகரமாக நிறைவு செய்ததை குறிக்கும் விதமாக சண்டிநகர் விமானப்படை நிலையத்தில் உள்ள கருட் பயிற்சி மையத்தில் மெரூன் பெரெட் அணிவகுப்பு 2021 ஜூலை 17 அன்று நடைபெற்றது. பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக ஏர் கமொடோர் கே கஜூரியா கலந்துக் கொண்டார்.

பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த வீரர்களுக்கு பதக்கங்கள்மெரூன் பெரெட், கருட் சிறப்பு  பதக்கம், சிறப்பு படை பட்டயம் உள்ளிட்டவற்றை தலைமை விருந்தினர் வழங்கினார். எல் சி அகோகா முய்வாவுக்கு அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்கியதற்கான பதக்கம் வழங்கப்பட்டது.

இளம் கருட் வீரர்களுடன் உரையாடிய தலைமை விருந்தினர், பணியில் சிறந்து விளங்குவதற்கான அவசியம் குறித்து குறிப்பிட்டார். பயிற்சி வழங்கும் அலுவலர்களின் கடின உழைப்பை பாராட்டிய அவர், தொடர்ந்து தங்கள் பணியை அவர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, நெருப்பை எதிர்த்துப் போராடுதல், கடத்தப்பட்டவர்களை மீட்டல், ஆயுதப் பயன்பாடு, தடைகளை தாண்டுதல், சுவர் ஏறுதல், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை கருட் வீரர்கள் செய்து காட்டினர்.

கருட் வீரர்கள் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து சிறப்புப் படையின் இளம் வீரர்களாக உருவாவதை குறிக்கும் விதமாக மதிப்பு மிகுந்த மெரூன் பெரெட் அணிவகுப்பு நடைபெறுகிறது.

                                                                                                                                                  -----



(Release ID: 1736435) Visitor Counter : 210