சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள்களை பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்: 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

Posted On: 11 JUL 2021 3:28PM by PIB Chennai

வாகனங்களில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும்  பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி  3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

நாக்பூரில் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, நாம் ரூ.8 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இது மிகப் பெரிய சவாலாக உள்ளது.  அதனால் எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக, மலிவு விலையில், அதிக மாசு இல்லாத உள்நாட்டு எத்தனால், உயிரி இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.  வெவ்வேறான மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவது பற்றி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 

நமது நாட்டில் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் அரிசி, சோளம் மற்றும் கரும்பு வீணாவதை தடுக்க நாம் இவற்றை எரிபொருளாக்க வேண்டும்.

நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் இன்ஜின்கள் பொருத்துவதை கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் பிளக்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் உள்ளன. இவற்றின் விலையும், பெட்ரோல் இன்ஜின் வாகனங்களின் விலையில் ஒரே மாதிரியானதுதான். பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிளக்ஸ் என்ஜின் எரிபொருள் செலவை குறைக்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734586

 

*****************



(Release ID: 1734606) Visitor Counter : 344