எரிசக்தி அமைச்சகம்

நிலைத்தன்மையை நோக்கிய எரிசக்தி இலக்குகளை வெளியிட்டது தேசிய அனல்மின் கழகம்

Posted On: 27 JUN 2021 4:54PM by PIB Chennai

எரிசக்தி மீதான ஐக்கிய நாடுகள் உயர் நிலை பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக தனது எரிசக்தி இலக்குகளை வெளியிட்டுள்ள இந்தியாவின் முதல் எரிசக்தி நிறுவனம் என்ற பெருமையை மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் தேசிய அனல்மின் கழகம் பெற்றுள்ளது.

இதன்படி 2032-ஆம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவ இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் 2032-ஆம் ஆண்டிற்குள்  ஒட்டு மொத்த எரிசக்தியின் தீவிரத்தை 10% குறைக்கவும் இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகளவில் தனது எரிசக்தி இலக்குகளை அறிவித்துள்ள ஒரு சில நிறுவனங்களுள் தேசிய அனல்மின் கழகமும் ஒன்று.

மேலும் 2025-ஆம் ஆண்டிற்குள் தூய்மையான எரிசக்தி ஆராய்ச்சிக்கான வசதி மற்றும் நிலையான எரிசக்தி மதிப்பு சங்கிலியை ஊக்குவிக்க குறைந்தபட்சம் 2 சர்வதேச கூட்டணிகள்/ குழுக்களை அமைக்கவும் அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அண்மையில் நடைபெற்றஎரிசக்தி மீதான உயர்நிலை பேச்சு வார்த்தைகளுக்கான அமைச்சகத்தின் கருப்பொருள் சார்ந்த மன்றத்தில்இந்த இலக்குகள் அறிவிக்கப்பட்டன. தேசிய அனல்மின் கழகத்தின் இலக்குகள் ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

நிலையான வளர்ச்சிக்கான 2030-ஆம் ஆண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எரிசக்தி சார்ந்த இலக்குகளை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஓர் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை நடத்தவிருக்கிறது.

தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மேம்படுத்தி பசுமை எரிசக்தியை அதிகரிக்க தேசிய அனல்மின் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 2032-ஆம் ஆண்டிற்குள் தனது ஒட்டுமொத்த எரிசக்தி உற்பத்தியில் 25% உள்ளடக்கி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக குறைந்தபட்சம் 32 ஜிகாவாட் எரிசக்தி திறனை உற்பத்தி செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730716

 

------

 



(Release ID: 1730736) Visitor Counter : 235