அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் கோவாக்சின் தயாரிப்புக்கு தேவைப்படும் மருந்து பொருளை இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் உற்பத்தி செய்யவுள்ளது

Posted On: 28 MAY 2021 4:37PM by PIB Chennai

தடுப்புமருந்து உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, கொவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் இதில் ஒன்றாகும்.

கோவாக்சின் தயாரிப்புக்கு தேவைப்படும் மருந்து பொருளை இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் பயோடெக் இடையே கையெழுத்தானது.

இது குறித்து பேசிய இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே ஆனந்த் குமார், ஜூன் 15 முதல் இந்த மருந்து பொருளை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும், முதல் கட்ட தடுப்பு மருந்து பாரத் பயோடெக்கை ஜூலை மாதத்தில் சென்றடையும் என்றும் தெரிவித்தார்.

10 முதல் 15 மில்லியன் டோஸ்களுக்கு தேவையான மருந்து பொருளை ஒரு மாதத்தில் இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த டாக்டர் ஆனந்த் குமார், ஆரம்பக்கட்டத்தில் 2 முதல் 3 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் பின்னர் அது ஆறு முதல் ஏழு மில்லியன் ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா 3.0-ன் கீழ் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுவது ஊக்கப் படுத்தப்படுகிறது. உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியன் இம்யுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட்டுக்கு ரூபாய் 60 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.

*****************



(Release ID: 1722524) Visitor Counter : 226