வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு மாநிலங்களில் கொவிட் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவசர ஆலோசனை

Posted On: 25 MAY 2021 5:32PM by PIB Chennai

வடகிழக்கு மாகாணங்களில் கொவிட் தொற்றின் பாதிப்பு அண்மையில் அதிகரித்திருப்பது தொடர்பாக, வட கிழக்கு மாகாண மேம்பாட்டிற்கான இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் அவசர ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தினார்.

அசாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய 8 வடகிழக்கு மாநிலங்களின் சுகாதாரச் செயலாளர்கள், வடகிழக்கு மாகாண மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர், வடகிழக்கு கவுன்சிலின் செயலாளர், மத்திய சுகாதார அமைச்சகத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பொறுப்பு வகிக்கும் இணைச் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வரும் நாட்களில் வடகிழக்கு மாகாணங்களில் கொவிட் தொற்றின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கொவிட் தொற்றின் முதல் அலையின்போது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படாததையும், சிக்கிம் போன்ற சில மாநிலங்களில் பொதுமுடக்கக் காலம் முழுவதும் ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படாத நிலை இருந்ததையும் நினைவு கூர்ந்தார். அதற்கு நேர் மாறாக, இரண்டு வாரங்களாக இந்த மாநிலங்களில் தொற்று பாதிப்பு திடீரென உயர்ந்திருப்பது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும், மாநிலங்களுக்குத் தேவையான  அனைத்து உதவிகளையும் உரிய நேரத்தில் மத்திய அரசு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721653

----



(Release ID: 1721731) Visitor Counter : 191