பாதுகாப்பு அமைச்சகம்

சமுத்திர சேது II-ன் ஒரு பகுதியாக இந்திய கடற்படை கப்பல் திரிகாண்ட் மும்பை வந்தடைந்தது

Posted On: 10 MAY 2021 4:46PM by PIB Chennai

சமுத்திர சேது II செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கத்தாரில் உள்ள ஹமாது  துறைமுகத்திலிருந்து மும்பைக்கு திரவ மருத்துவ ஆக்சிஜன் கிரையோஜெனிக் கொள்கலன்களை கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை கப்பல் திரிகாண்ட் அனுப்பி வைக்கப்பட்டது.

2021 மே 5 அன்று கத்தாருக்குள் நுழைந்த இக்கப்பல், 2021 மே 10 அன்று 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனோடு மும்பை வந்தடைந்தது.

கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு உதவுவதற்காக 'ஆக்சிஜன் ஆதரவு பாலம்' எனும் பிரான்சு நாட்டின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கண்ட ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் திரவ ஆக்சிஜன் கொள்கலன்களை கத்தார் மூலம் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். கத்தாருக்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டலின் இந்த இந்திய-பிரான்சு முயற்சியின் மூலம் அடுத்த இரண்டு மாதங்களில் 600 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இந்தியா வந்தடையும்.

கத்தாரில் இருந்து கொண்டுவரப்பட்ட முதல் ஆக்சிஜன் கொள்கலன் மகராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு ஆதித்ய தாக்கரே மற்றும் மும்பையில் உள்ள பிரான்சு தூதரகத்தின் தலைமை தூதர் திருமிகு சோனியா பார்பிரி ஆகியோரின் முன்னிலையில் மகாராஷ்டிர மாநில அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

                                                                                        -----



(Release ID: 1717478) Visitor Counter : 162