பிரதமர் அலுவலகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் 25ம் தேதி பயணம்

கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்

புதுச்சேரியிலும் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 23 FEB 2021 7:27PM by PIB Chennai

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 பிப்ரவரி 25ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் காலை 11.30 மணியளவில் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மாலை 4 மணியளவில், கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில் பிரதமர்

நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இது 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி நிலையங்களும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி மையம் நெய்வேலி சுரங்கத்தில் உள்ள பழுப்பு நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும். இங்கு இத்திட்டத்துக்கு ஆயுள் முழுக்க தேவையான லிக்னைட் இருப்பு உள்ளது. 100 சதவீத சாம்பலை பயன்படுத்தும் விதத்தில் இந்த மின் உற்பத்தி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு பயனளிக்கும். இதன் 65 சதவீத பங்கு தமிழகத்திடம் உள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இத்திட்டம் ரூ.3000 கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பவானி சாகர் அணை மற்றும் கால்வாய் பணி 1955ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கீழ் பவானி அமைப்பில், கீழ் பவானி கால்வாய் திட்டத்தில், அரக்கன்கோட்டை மற்றும் தடாபள்ளி கால்வாய்கள் மற்றும் கலிங்கராயன் கால்வாய் உள்ளன. இது ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு நீர்பாசன வசதி அளிக்கிறது. கீழ் பவானி திட்ட கால்வாய் விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணிகள் நபார்டு கட்டமைப்பு மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் ரூ.934 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், தற்போதுள்ள நீர்ப்பாசன அமைப்பை புணரமைத்து கால்வாய் திறனை மேம்படுத்துவதாகும். கால்வாய்கள் அமைப்பது தவிர, 824 மதகுகள், 176 வடிகால்கள் மற்றும் 32 பாலங்கள் பழுதுபார்க்கப்பட்டு புணரமைக்கப்படுகின்றன.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவில் முக்கியமான துறைமுகம். தற்போது 76 சதவீதம் சரக்குகள் சாலை வழியாக கோரம்பள்ளம் பாலத்தை பயன்படுத்தி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பாலம் 1964ம் ஆண்டு 14 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மீது தினந்தோறும் சராசரியாக 3000 கனரக வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஏற்படுகிறது. சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்கும், துறைமுக பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாலத்தின் இரு புறங்களும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. டிடிபிஎஸ் சுற்றிலிருந்து, சிட்டி லிங்க் சுற்று வரை சாலைகள் இரு புறத்திலும் ரூ.42 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டு இரு வழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்ட்டுள்ள 5 மெகா வாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டம் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 80 லட்சம் யூனிட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும். இது துறைமுகத்தின் 56 சதவீத மின் தேவையை நிறைவேற்றி, துறைமுக செயல்பாட்டில் கார்பன் மாசுவை குறைக்க உதவும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். திருப்பூர் வீரபாண்டியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் பகுதியில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த குடியிருப்புகள் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் நகர்ப்புற ஏழைகள், குடிசை வாசிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த வீடுகள் 400 சதுர அடியில், ஹால், சமயலறை, கழிவறை, குளியலறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் தார்சாலை, தெரு விளக்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை, ரேசன் கடை, அங்கன்வாடி மையம், நூலகம் மற்றும் கடைகள் அமைக்கப்படுகின்றன.

கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, மற்றும் தூத்துக்குடி உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மையங்கள் ரூ.107 கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்கள் 24 மணி நேரமும், விரைவு சேவைகளுக்கான ஸ்மார்ட் தீர்வுகளை வழங்கும்.

புதுச்சேரியில் பிரதமர்

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்துக்கு ரூ.2,426 கோடி செலவிடப்படும். காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.44 கோடி செலவில் கட்டப்படும். இந்த துறைமுகம், சென்னையிலிருந்து புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் இணைப்பை வழங்கும்.

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இது ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

புதுச்சேரி ஜிப்மெர் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது ஆராய்ச்சி கூடமாகவும், குறுகிய கால பயிற்சி மையமாகவம், ரத்த வங்கியாகவும் செயல்படும். இது ரூ.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது தடகள வீராங்கனைகளுக்காக ரூ.12 கோடி செலவில் இந்திய விளயைாட்டு ஆணையத்தால் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் கட்டப்பட்ட பாரம்பரிய மாரி கட்டிடத்தை அவர் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி வரலாற்றின் அடையாளமாக இருந்த மாரி கட்டிடம், பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்டது. தற்போது அதே கட்டிடக் கலையில் ரூ.15 கோடி செலவில் அந்த கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. 



(Release ID: 1700310) Visitor Counter : 243