மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய கல்விக் கொள்கை 2020: பள்ளி கல்விக்கான செயல்திட்டம்

Posted On: 18 JAN 2021 6:14PM by PIB Chennai

1. தேசிய கல்விக் கொள்கைகளில் மூன்றாவதும் (1968 மற்றும் 1992-இல் திருத்தப்பட்ட 1986-ஆம் ஆண்டு கொள்கை) 21-வது நூற்றாண்டில் முதலாவதுமான தேசிய கல்விக் கொள்கை 2020, ஆரம்ப நிலைக்கு முந்தைய கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

2. அடுத்த 20 வருடங்களுக்கான இந்தக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான பல்வேறு கால அளவுகள் உள்ளன. எனவே, தேசிய கல்விக் கொள்கை படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.

3. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பல்வேறு பரிந்துரைகளையும், அவற்றின் செயல்படுத்துதல் யுக்திகளையும் குறித்து விவாதிப்பதற்காக 2020 செப்டம்பர் 8 முதல் 25 வரை சிக்‌ஷக்பர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 15 லட்சம் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

4. தேசிய கல்விக் கொள்கை 2020-இன் லட்சியங்களையும், நோக்கங்களையும் அடைவதற்காக, ஒவ்வொரு பரிந்துரையையும் செயல்பாடுகளோடு இணைத்து, அவற்றை செயல்படுத்த வேண்டிய முகமைகள், காலக்கெடுக்கள் மற்றும் வெளிப்பாடுகள் குறித்த விவரங்களைக் குறிப்பிட்டு மாதிரி செயல்திட்டத்தை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உருவாக்கியது.

5. 2020 செப்டம்பர் 10 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/தன்னாட்சி அமைப்புகளுடன் இந்த செயல்திட்டம் பகிரப்பட்டது. இத்துறையின் தன்னாட்சி பெற்ற அமைப்புகளிடமிருந்தும், 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடமிருந்தும் 7177 ஆலோசனைகள்/பின்னூட்டங்கள் வரப்பெற்றன.

6. நிபுணர் குழுக்களால் இவை ஆய்வு செய்யப்பட்டு, செயல்திட்டத்தின் இறுதி வரைவில் இவை இணைக்கப்பட்டுள்ளன. இறுதி செய்யப்பட்டு வரும் இந்த ஆவணம் விரைவில் வெளியிடப்படும்.

7. இந்தத் திட்டத்தை, செயல்படுத்தக்கூடியதாக, நெகிழ்வுத்தன்மை மற்றும் கூட்டுத்தன்மை மிக்கதாக ஆக்குவதற்காக சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டு போதுமான அக்கறை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

8. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் மத்திய அரசு திட்டங்களின் கீழ், தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு பகுதிகள் கொண்டுவரப்படும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டிற்குள், அதாவது 2021-22-க்குள், அது உருவாக்கப்பட்டுவிடும்.

9. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை சார்ந்து அக்கொள்கையை செயல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689725

**********************



(Release ID: 1689795) Visitor Counter : 396